2nd Thiruvandāthi

இரண்டாம் திருவந்தாதி

2nd Thiruvandāthi
Boothathazhvar, the second among the Mudhalazhvars, composed the second Thiruvanthathi, which consists of one hundred verses. Along with Poigaiyazhvar, Boothathazhvar experienced the special qualities of the Lord. Through the Lord's grace, his intense devotion matured into a state of supreme knowledge (Parajnana). Witnessing the Lord's complete state + Read more
முதலாழ்வார்களில் இரண்டாவதாகத் திகழும் பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி நூறு பாசுரங்களை உடையது. பொய்கையாழ்வாருடன் கூடியிருந்து எம்பெருமான் குணவிசேஷங்களை அனுபவித்த இவ்வாழ்வார் எம்பெருமானின் அருளால் தனக்கு இருந்த பரபக்தியானது முதிர்ந்து பரஜ்ஞான தசையை அடைய, எம்பெருமானின் + Read more
Group: 3rd 1000
Verses: 2182 to 2281
Glorification: Para / Omnipresent State (பரத்வம்)
  • தனியன் / Taniyan
  • IT 1
    2182 ## அன்பே தகளியா * ஆர்வமே நெய் ஆக *
    இன்பு உருகு சிந்தை இடு திரியா ** நன்பு உருகி
    ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் * நாரணற்கு *
    ஞானத் தமிழ் புரிந்த நான் 1
  • IT 2
    2183 ஞானத்தால் நன்கு உணர்ந்து * நாரணன் தன் நாமங்கள் *
    தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால் ** வானத்து
    அணி அமரர் * ஆக்குவிக்கும் அஃது அன்றே * நங்கள்
    பணி அமரர் கோமான் பரிசு 2
  • IT 3
    2184 பரிசு நறு மலரால் * பாற்கடலான் பாதம் *
    புரிவார் புகப்பெறுவர் போலாம் ** புரிவார்கள்
    தொல் அமரர் கேள்வித் * துலங்கு ஒளி சேர் தோற்றத்து *
    நல் அமரர் கோமான் நகர் 3
  • IT 4
    2185 நகர் இழைத்து நித்திலத்து * நாண் மலர் கொண்டு * ஆங்கே
    திகழும் மணி வயிரம் சேர்த்து ** நிகர் இல்லாப்
    பைங் கமலம் ஏந்திப் * பணிந்தேன் பனி மலராள் *
    அங்கம் வலம் கொண்டான் அடி 4
  • IT 5
    2186 அடி மூன்றில் இவ் உலகம் * அன்று அளந்தாய் போலும் *
    அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் ** படி நின்ற
    நீர் ஓத மேனி * நெடுமாலே! * நின் அடியை
    யார் ஓத வல்லார் அறிந்து? 5
  • IT 6
    2187 அறிந்து ஐந்தும் உள் அடக்கி * ஆய் மலர் கொண்டு * ஆர்வம்
    செறிந்த மனத்தராய் செவ்வே ** அறிந்து அவன் தன்
    பேர் ஓதி ஏத்தும் * பெருந்தவத்தோர் காண்பரே *
    கார் ஓத வண்ணன் கழல் 6
  • IT 7
    2188 கழல் எடுத்து வாய் மடித்துக் * கண் சுழன்று * மாற்றார்
    அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச ** தழல் எடுத்த
    போர் ஆழி ஏந்தினான் * பொன் மலர்ச் சேவடியை *
    ஓர் ஆழி நெஞ்சே! உகந்து 7
  • IT 8
    2189 உகந்து உன்னை வாங்கி * ஒளி நிறம் கொள் கொங்கை *
    அகம் குளிர உண் என்றாள் ஆவி ** உகந்து
    முலை உண்பாய் போலே * முனிந்து உண்டாய் * நீயும்
    அலை பண்பால் ஆனமையால் அன்று 8
  • IT 9
    2190 அன்று அதுகண்டு அஞ்சாத * ஆய்ச்சி உனக்கு இரங்கி *
    நின்று முலை தந்த இந் நீர்மைக்கு ** அன்று
    வரன்முறையால் நீ அளந்த * மா கடல் சூழ் ஞாலம் *
    பெரு முறையால் எய்துமோ பேர்த்து? 9
  • IT 10
    2191 பேர்த்தனை * மா சகடம் பிள்ளையாய் * மண் இரந்து
    காத்தனை * பல் உயிரும் காவலனே ** ஏத்திய
    நா உடையேன் பூ உடையேன் * நின் உள்ளி நின்றமையால் *
    காவடியேன் பட்ட கடை 10
  • IT 11
    2192 கடை நின்று அமரர் கழல் தொழுது ** நாளும்
    இடை நின்ற * இன்பத்தராவர் ** படை நின்ற
    நீரோத மேனி * நெடுமாலே ! * நின் அடியை
    யாரோத வல்லார் அவர் ? 11
  • IT 12
    2193 அவர் இவர் என்று இல்லை * அரவு அணையான் பாதம் *
    எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில் ** பவரும்
    செழும் கதிரோன் ஒண் மலரோன் * கண்ணுதலோன் அன்றே? *
    தொழும் தகையார் நாளும் தொடர்ந்து 12
  • IT 13
    2194 தொடர் எடுத்த மால் யானை * சூழ் கயம் புக்கு அஞ்சி *
    படர் எடுத்த பைங் கமலம் கொண்டு ** அன்று இடர் அடுக்க
    ஆழியான் * பாதம் பணிந்து அன்றே? * வானவர் கோன்
    பாழி தான் எய்திற்று பண்டு 13
  • IT 14
    2195 பண்டிப் பெரும் பதியை ஆக்கி * பழி பாவம்
    கொண்டு * இங்கு வாழ்வாரைக் கூறாதே ** எண் திசையும்
    பேர்த்த கரம் நான்கு உடையான் * பேர் ஓதி பேதைகாள் *
    தீர்த்தகரர் ஆமின் திரிந்து 14
  • IT 15
    2196 திரிந்தது வெம் சமத்துத் * தேர் கடவி * அன்று
    பிரிந்தது * சீதையை மான் பின் போய் ** புரிந்ததுவும்
    கண் பள்ளிகொள்ள * அழகியதே * நாகத்தின்
    தண் பள்ளி கொள்வான் தனக்கு 15
  • IT 16
    2197 தனக்கு அடிமை பட்டது * தான் அறியானேலும் *
    மனத்து அடைய வைப்பது ஆம் மாலை ** வனத் திடரை
    ஏரி ஆம் வண்ணம் * இயற்றும் இது அல்லால் *
    மாரி யார் பெய்கிற்பார் மற்று ? 16
  • IT 17
    2198 மற்று ஆர் இயல் ஆவர் * வானவர் கோன் மா மலரோன் *
    சுற்றும் வணங்கும் தொழிலானை ** ஒற்றைப்
    பிறை இருந்த * செஞ்சடையான் பின் சென்று * மாலைக்
    குறை இரந்து தான் முடித்தான் கொண்டு 17
  • IT 18
    2199 கொண்டது உலகம் * குறள் உருவாய் கோளரியாய் *
    ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது ** உண்டதுவும்
    தான் கடந்த ஏழ் உலகே * தாமரைக்கண் மால் ஒரு நாள் *
    வான் கடந்தான் செய்த வழக்கு 18
  • IT 19
    2200 வழக்கு அன்று கண்டாய் * வலி சகடம் செற்றாய் *
    வழக்கு என்று நீ மதிக்க வேண்டா ** குழக் கன்று
    தீ விளவின் காய்க்கு எறிந்த * தீமை திருமாலே! *
    பார் விளங்கச் செய்தாய் பழி 19
  • IT 20
    2201 பழி பாவம் கையகற்றிப் * பல் காலும் நின்னை *
    வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ ** வழு இன்றி
    நாரணன் தன் நாமங்கள் * நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும் *
    காரணங்கள் தாம் உடையார் தாம் 20
  • IT 21
    2202 தாம் உளரே * தம் உள்ளம் உள் உளதே * தாமரையின்
    பூ உளதே * ஏத்தும் பொழுது உண்டே ** வாமன்
    திரு மருவு * தாள் மருவு சென்னியரே * செவ்வே
    அரு நரகம் சேர்வது அரிது 21
  • IT 22
    2203 அரியது எளிது ஆகும் * ஆற்றலால் மாற்றி *
    பெருக முயல்வாரைப் பெற்றால் ** கரியது ஓர்
    வெண் கோட்டு மால் யானை * வென்று முடித்தன்றே *
    தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து 22
  • IT 23
    2204 தாழ்ந்து வரம் கொண்டு * தக்க வகைகளால் *
    வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் ** தாழ்ந்த
    விளங் கனிக்குக் * கன்று எறிந்து வேற்று உருவாய் * ஞாலம்
    அளந்து அடிக்கீழ்க் கொண்ட அவன் 23
  • IT 24
    2205 அவன் கண்டாய் நல் நெஞ்சே * ஆர் அருளும் கேடும் *
    அவன் கண்டாய் ஐம்புலனாய் நின்றான் ** அவன் கண்டாய்
    காற்று தீ நீர் வான் * கரு வரை மண் கார் ஓதச் *
    சீற்றத் தீ ஆவானும் சென்று 24
  • IT 25
    2206 சென்றது இலங்கைமேல் * செவ்வே தன் சீற்றத்தால் *
    கொன்றது இராவணனை கூறுங்கால் ** நின்றதுவும்
    வேய் ஓங்கு தண் சாரல் * வேங்கடமே * விண்ணவர் தம்
    வாய் ஓங்கு தொல் புகழான் வந்து 25
  • IT 26
    2207 வந்தித்து அவனை * வழி நின்ற ஐம்பூதம் *
    ஐந்தும் அகத்து அடக்கி ஆர்வமாய் ** உந்திப்
    படி அமரர் வேலையான் * பண்டு அமரர்க்கு ஈந்த *
    படி அமரர் வாழும் பதி 26
  • IT 27
    2208 பதி அமைந்து நாடிப் * பருத்து எழுந்த சிந்தை *
    மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி ** கதி மிகுத்து அம்
    கோல் தேடி ஓடும் * கொழுந்ததே போன்றதே *
    மால் தேடி ஓடும் மனம் 27
  • IT 28
    2209 மனத்து உள்ளான் வேங்கடத்தான் * மா கடலான் * மற்றும்
    நினைப்பு அரிய * நீள் அரங்கத்து உள்ளான் ** எனைப் பலரும்
    தேவாதி தேவன் * எனப்படுவான் * முன் ஒரு நாள்
    மா வாய் பிளந்த மகன் 28
  • IT 29
    2210 மகனாகக் கொண்டு எடுத்தாள் * மாண்பு ஆய கொங்கை *
    அகன் ஆர உண்பன் என்று உண்டு ** மகனைத் தாய்
    தேறாத வண்ணம் * திருத்தினாய் * தென் இலங்கை
    நீறு ஆக எய்து அழித்தாய்! நீ 29
  • IT 30
    2211 நீ அன்று உலகு அளந்தாய் * நீண்ட திருமாலே! *
    நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் ** நீ அன்று
    கார் ஓதம் முன் கடைந்து * பின் அடைத்தாய் மா கடலை *
    பேர் ஓத மேனிப் பிரான்! 30
  • IT 31
    2212 பிரான் என்றும் நாளும் * பெரும் புலரி என்றும் *
    குரா நல் செழும் போது கொண்டு ** வராகத்து
    அணி உருவன் * பாதம் பணியும் அவர் கண்டீர் *
    மணி உருவம் காண்பார் மகிழ்ந்து 31
  • IT 32
    2213 மகிழ்ந்தது சிந்தை * திருமாலே * மற்றும்
    மகிழ்ந்தது * உன் பாதமே போற்றி ** மகிழ்ந்தது
    அழல் ஆழி சங்கம் * அவை பாடி ஆடும் *
    தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து 32
  • IT 33
    2214 துணிந்தது சிந்தை * துழாய் அலங்கல் * அங்கம்
    அணிந்தவன் பேர் * உள்ளத்துப் பல்கால் ** பணிந்ததுவும்
    வேய் பிறங்கு சாரல் * விறல் வேங்கடவனையே *
    வாய் திறங்கள் சொல்லும் வகை 33
  • IT 34
    2215 வகையால் அவனி * இரந்து அளந்தாய் பாதம் *
    புகையால் நறு மலரால் முன்னே ** மிக வாய்ந்த
    அன்பு ஆக்கி ஏத்தி * அடிமைப்பட்டேன் உனக்கு *
    என் பாக்கியத்தால் இனி 34
  • IT 35
    2216 இனிது என்பர் காமம் * அதனிலும் ஆற்ற *
    இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் ** இனிது என்று
    காமம் நீர் வேளாது * நின் பெருமை வேட்பரேல் *
    சேம நீர் ஆகும் சிறிது 35
  • IT 36
    2217 சிறியார் பெருமை * சிறிதின் கண் எய்தும் *
    அறியாரும் தாம் அறியார் ஆவர் ** அறியாமை
    மண் கொண்டு மண் உண்டு * மண் உமிழ்ந்த மாயன் என்று *
    எண் கொண்டு என் நெஞ்சே ! இரு 36
  • IT 37
    2218 இரும் தண் கமலத்து * இரு மலரின் உள்ளே *
    திருந்து திசைமுகனைத் தந்தாய் ** பொருந்திய நின்
    பாதங்கள் ஏத்திப் * பணியாவேல் * பல் பிறப்பும்
    ஏதங்கள் எல்லாம் எமக்கு 37
  • IT 38
    2219 எமக்கு என்று இரு நிதியம் * ஏமாந்து இராதே *
    தமக்கு என்றும் சார்வம் அறிந்து ** நமக்கு என்றும்
    மாதவனே என்னும் * மனம் படைத்து * மற்று அவன் பேர்
    ஓதுவதே நாவினால் ஓத்து 38
  • IT 39
    2220 ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே * உத்தமன் பேர்
    ஏத்தும் * திறம் அறிமின் ஏழைகாள் ** ஓத்து அதனை
    வல்லீரேல் * நன்று அதனை மாட்டீரேல் * மாதவன் பேர்
    சொல்லுவதே ஓத்தின் சுருக்கு 39
  • IT 40
    2221 சுருக்காக வாங்கி * சுலாவி நின்று * ஐயார்
    நெருக்கா முன் * நீர் நினைமின் கண்டீர் ** திருப் பொலிந்த
    ஆகத்தான் * பாதம் அறிந்தும் அறியாத *
    போகத்தால் இல்லை பொருள் 40
  • IT 41
    2222 பொருளால் அமர் உலகம் * புக்கு இயலல் ஆகாது *
    அருளால் அறம் அருளும் அன்றே ? ** அருளாலே
    மா மறையோர்க்கு ஈந்த * மணிவண்ணன் பாதமே *
    நீ மறவேல் நெஞ்சே! நினை 41
  • IT 42
    2223 நினைப்பன் திருமாலை * நீண்ட தோள் காண *
    நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார் ** மனைப்பால்
    பிறந்தார் பிறந்து எய்தும் * பேரின்பம் எல்லாம் *
    துறந்தார் தொழுதார் அத் தோள் 42
  • IT 43
    2224 தோள் இரண்டு எட்டு ஏழும் * மூன்றும் முடி அனைத்தும் *
    தாள் இரண்டும் வீழச் * சரம் துரந்தான் ** தாள் இரண்டும்
    ஆர் தொழுவார் பாதம் * அவை தொழுவது அன்றே ? * என்
    சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு 43
  • IT 44
    2225 சிறந்தார்க்கு எழு துணையாம் * செங்கண் மால் நாமம் *
    மறந்தாரை மானிடமா வையேன் ** அறம் தாங்கும்
    மாதவனே! என்னும் * மனம் படைத்து * மற்று அவன்பேர்
    ஓதுவதே நாவினால் உள்ளு 44
  • IT 45
    2226 உளது என்று இறுமாவார் * உண்டு இல்லை என்று *
    தளர்தல் அதன் அருகும் சாரார் ** அளவு அரிய
    வேதத்தான் வேங்கடத்தான் * விண்ணோர் முடி தோயும் *
    பாதத்தான் பாதம் பயின்று 45
  • IT 46
    2227 பயின்றது அரங்கம் திருக்கோட்டி * பல் நாள்
    பயின்றதுவும் * வேங்கடமே பல்நாள் ** பயின்றது
    அணி திகழும் சோலை * அணி நீர் மலையே *
    மணி திகழும் வண் தடக்கை மால் 46
  • IT 47
    2228 மாலை அரி உருவன் * பாதமலர் அணிந்து *
    காலை தொழுது எழுமின் கைகோலி ** ஞாலம்
    அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த * அண்ணலை மற்று அல்லால் *
    உளம் கிடந்த ஆற்றால் உணர்ந்து 47
  • IT 48
    2229 உணர்ந்தாய் மறை நான்கும் * ஓதினாய் நீதி *
    மணந்தாய் மலர் மகள் தோள் மாலே ** மணந்தாய் போய்
    வேய் இரும் சாரல் * வியல் இரு ஞாலம் சூழ் *
    மா இரும் சோலை மலை 48
  • IT 49
    2230 மலை ஏழும் * மா நிலங்கள் ஏழும் அதிர *
    குலை சூழ் குரை கடல்கள் ஏழும் ** முலை சூழ்ந்த
    நஞ்சு உரத்துப் பெண்ணை * நவின்று உண்ட நாவன் என்று *
    அஞ்சாது என்நெஞ்சே அழை 49
  • IT 50
    2231 அழைப்பன் திருமாலை * ஆங்கு அவர்கள் சொன்ன *
    பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி ** இழைப்பு அரிய
    ஆயவனே! யாதவனே ! * என்றவனை யார் முகப்பும் *
    மாயவனே ! என்று மதித்து 50
  • IT 51
    2232 மதிக் கண்டாய் நெஞ்சே ! * மணிவண்ணன் பாதம் *
    மதிக் கண்டாய் மற்று அவன் பேர் தன்னை ** மதிக் கண்டாய்
    பேர் ஆழிநின்று * பெயர்ந்து கடல் கடைந்த
    நீர் ஆழி வண்ணன் நிறம் 51
  • IT 52
    2233 நிறம் கரியன் * செய்ய நெடு மலராள் மார்வன் *
    அறம் பெரியன் ஆர் அது அறிவார் ? ** மறம் புரிந்த
    வாள் அரக்கன் போல்வானை * வானவர் கோன் தானத்து *
    நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி 52
  • IT 53
    2234 நெறியார் குழல் கற்றை * முன்நின்று பின் தாழ்ந்து *
    அறியாது இளங் கிரி என்று எண்ணி ** பிரியாது
    பூங்கொடிக்கள் வைகும் * பொரு புனல் குன்று என்னும் *
    வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு 53
  • IT 54
    2235 வெற்பு என்று இரும் சோலை * வேங்கடம் என்று இவ் இரண்டும் *
    நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல் ** நிற்பு என்று
    உளம் கோயில் * உள்ளம் வைத்து உள்ளினேன் * வெள்ளத்து
    இளங் கோயில் கைவிடேல் என்று 54
  • IT 55
    2236 என்றும் மறந்தறியேன் * ஏழ் பிறப்பும் எப்பொழுதும் *
    நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் ** வென்றி
    அடல் ஆழி கொண்ட * அறிவனே! * இன்பக்
    கடல் ஆழி நீ அருளிக் காண் 55
  • IT 56
    2237 காணக் கழி காதல் * கைமிக்குக் காட்டினால் *
    நாணப்படும் என்றால் நாணுமே? ** பேணிக்
    கரு மாலைப் * பொன் மேனி காட்டாமுன் காட்டும் *
    திருமாலை நங்கள் திரு 56
  • IT 57
    2238 திருமங்கை நின்றருளும் * தெய்வம் நா வாழ்த்தும் *
    கருமம் கடைப்பிடிமின் கண்டீர் ** உரிமையால்
    ஏத்தினோம் பாதம் * இருந் தடக்கை எந்தை பேர் *
    நால் திசையும் கேட்டீரே? நாம் 57
  • IT 58
    2239 நாம் பெற்ற நன்மையும் * நா மங்கை நல் நெஞ்சத்து *
    ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து ** வேம்பின்
    பொருள் நீர்மை ஆயினும் * பொன் ஆழி பாடு என்று *
    அருள் நீர்மை தந்த அருள் 58
  • IT 59
    2240 அருள் புரிந்த சிந்தை * அடியார்மேல் வைத்து *
    பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது ** இருள் திரிந்து
    நோக்கினேன் நோக்கி * நினைந்தேன் அது ஒண் கமலம் *
    ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து 59
  • IT 60
    2241 ஓர் உருவன் அல்லை * ஒளி உருவம் நின் உருவம் *
    ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் ** ஓர் உருவம்
    ஆதியாம் வண்ணம் * அறிந்தார் அவர் கண்டீர் *
    நீதியால் மண் காப்பார் நின்று 60
  • IT 61
    2242 நின்றது ஓர் பாதம் * நிலம் புதைப்ப * நீண்ட தோள்
    சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் ** அன்று
    கரு மாணியாய் * இரந்த கள்வனே! * உன்னைப்
    பிரமாணித்தார் பெற்ற பேறு! 61
  • IT 62
    2243 பேறு ஒன்றும் முன் அறியேன் * பெற்று அறியேன் பேதைமையால் *
    மாறு என்று சொல்லி வணங்கினேன் ** ஏறின்
    பெருத்தெருத்தம் கோடு ஒசிய * பெண் நசையின் பின் போய் *
    எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு 62
  • IT 63
    2244 ஏறு ஏழும் * வென்று அடர்த்த எந்தை * எரி உருவத்து
    ஏறு ஏறி * பட்ட இடுசாபம் ** பாறு ஏறி
    உண்ட தலை வாய் நிறையக் * கோட்டு அம் கை ஒண் குருதி *
    கண்ட பொருள் சொல்லின் கதை 63
  • IT 64
    2245 கதையும் பெரும் பொருளும் கண்ணா ! * நின் பேரே
    இதயம் * இருந்தவையே ஏத்தில் ** கதையும்
    திருமொழியாய் நின்ற * திருமாலே ! * உன்னைப்
    பரு மொழியால் காணப் பணி 64
  • IT 65
    2246 பணிந்தேன் திருமேனி * பைங் கமலம் கையால் *
    அணிந்தேன் உன் சேவடிமேல் அன்பாய் ** துணிந்தேன்
    புரிந்து ஏத்தி * உன்னை புகலிடம் பார்த்து * ஆங்கே
    இருந்து ஏத்தி வாழும் இது 65
  • IT 66
    2247 இது கண்டாய் நல் நெஞ்சே ! * இப் பிறவி ஆவது *
    இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது ** இது கண்டாய்
    நாரணன் பேர் ஓதி * நரகத்து அருகு அணையா *
    காரணமும் வல்லையேல் காண் 66
  • IT 67
    2248 கண்டேன் திருமேனி * யான் கனவில் * ஆங்கு அவன் கைக்
    கண்டேன் * கனலும் சுடர் ஆழி ** கண்டேன்
    உறு நோய் வினை இரண்டும் * ஓட்டுவித்து * பின்னும்
    மறு நோய் செறுவான் வலி 67
  • IT 68
    2249 வலி மிக்க வாள் எயிற்று * வாள் அவுணர் மாள *
    வலி மிக்க வாள் வரை மத்து ஆக * வலி மிக்க
    வாள் நாகம் சுற்றி * மறுகக் கடல் கடைந்தான் *
    கோள் நாகம் கொம்பு ஒசித்த கோ 68
  • IT 69
    2250 கோ ஆகி * மா நிலம் காத்து * நம் கண் முகப்பே
    மா ஏகிச் செல்கின்ற மன்னவரும் ** பூ மேவும்
    செங் கமல நாபியான் * சேவடிக்கே ஏழ் பிறப்பும் *
    தண் கமலம் ஏய்ந்தார் தமர் 69
  • IT 70
    2251 தமர் உள்ளம் தஞ்சை * தலை அரங்கம் தண்கால் *
    தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை ** தமர் உள்ளும்
    மாமல்லை கோவல் * மதிள் குடந்தை என்பரே *
    ஏ வல்ல எந்தைக்கு இடம் 70
  • IT 71
    2252 இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப * எரி கான்று
    அடங்கார் * ஒடுங்குவித்தது ஆழி ** விடம் காலும்
    தீ வாய் அரவு அணைமேல் * தோன்றல் திசை அளப்பான் *
    பூ ஆர் அடி நிமிர்த்த போது 71
  • IT 72
    2253 போது அறிந்து வானரங்கள் * பூஞ்சுனை புக்கு * ஆங்கு அலர்ந்த
    போது அரிந்துகொண்டு ஏத்தும் போது ** உள்ளம் போது
    மணி வேங்கடவன் * மலர் அடிக்கே செல்ல *
    அணி வேங்கடவன் பேர் ஆய்ந்து 72
  • IT 73
    2254 ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் * ஆதி நடு அந்திவாய் *
    வாய்ந்த மலர் தூவி வைகலும் ** ஏய்ந்த
    பிறைக் கோட்டுச் * செங்கண் கரி விடுத்த பெம்மான் *
    இறைக்கு ஆட்படத் துணிந்த யான் 73
  • IT 74
    2255 யானே தவம் செய்தேன் * ஏழ் பிறப்பும் எப்பொழுதும் *
    யானே தவம் உடையேன் எம் பெருமான் ! ** யானே
    இருந்த தமிழ் நல் மாலை * இணை அடிக்கே சொன்னேன் *
    பெருந் தமிழன் நல்லேன் பெருகு 74
  • IT 75
    2256 பெருகு மத வேழம் * மாப் பிடிக்கு முன் நின்று *
    இரு கண் இள மூங்கில் வாங்கி ** அருகு இருந்த
    தேன் கலந்து நீட்டும் * திருவேங்கடம் கண்டீர் *
    வான் கலந்த வண்ணன் வரை 75
  • IT 76
    2257 வரைச் சந்தனக் குழம்பும் * வான் கலனும் பட்டும் *
    விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் நிரைத்துக்கொண்டு **
    ஆதிக்கண் நின்ற * அறிவன் அடி இணையே *
    ஓதிப் பணிவது உறும் 76
  • IT 77
    2258 உறும் கண்டாய் நல் நெஞ்சே ! * உத்தமன் நல் பாதம் *
    உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் ** உறும் கண்டாய்
    ஏத்திப் பணிந்து அவன் பேர் * ஈர் ஐஞ்ஞூறு எப்பொழுதும் *
    சாற்றி உரைத்தல் தவம் 77
  • IT 78
    2259 தவம் செய்து * நான் முகனே பெற்றான் * தரணி
    நிவந்து அளப்ப * நீட்டிய பொன் பாதம் ** சிவந்த தன்
    கை அனைத்தும் * ஆரக் கழுவினான் * கங்கை நீர்
    பெய்து அனைத்துப் பேர் மொழிந்து பின் 78
  • IT 79
    2260 பின் நின்று * தாய் இரப்ப கேளான் * பெரும் பணைத் தோள்
    முன் நின்று * தான் இரப்பாள் மொய்ம் மலராள் ** சொல் நின்ற
    தோள் நலத்தான் * நேர் இல்லாத் தோன்றல் * அவன் அளந்த
    நீள் நிலம் தான் அத்தனைக்கும் நேர் 79
  • IT 80
    2261 நேர்ந்தேன் அடிமை * நினைந்தேன் அது ஒண் கமலம் *
    ஆர்ந்தேன் உன் சேவடிமேல் அன்பாய் ** ஆர்ந்த
    அடிக் கோலம் * கண்டவர்க்கு என்கொலோ * முன்னைப்
    படிக் கோலம் கண்ட பகல்? 80
  • IT 81
    2262 பகல் கண்டேன் * நாரணனைக் கண்டேன் * கனவில்
    மிகக் கண்டேன் * மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன் **
    ஊன் திகழும் நேமி * ஒளி திகழும் சேவடியான் *
    வான் திகழும் சோதி வடிவு 81
  • IT 82
    2263 வடிக் கோல வாள் நெடுங் கண் * மா மலராள் * செவ்விப்
    படிக் கோலம் கண்டு அகலாள் பல்நாள் ** அடிக்கோலி
    ஞாலத்தாள் * பின்னும் நலம் புரிந்தது என்கொலோ? *
    கோலத்தால் இல்லை குறை 82
  • IT 83
    2264 குறையாக வெஞ் சொற்கள் * கூறினேன் கூறி *
    மறை ஆங்கு என உரைத்த மாலை ** இறையேனும்
    ஈயும்கொல் ! என்றே * இருந்தேன் எனைப் பகலும் *
    மாயன்கண் சென்ற வரம் 83
  • IT 84
    2265 வரம் கருதி தன்னை * வணங்காத வன்மை *
    உரம் கருதி மூர்க்கத்தவனை ** நரம் கலந்த
    சிங்கமாய்க் கீண்ட * திருவன் அடி இணையே *
    அம் கண் மா ஞாலத்து அமுது 84
  • IT 85
    2266 அமுது என்றும் தேன் என்றும் * ஆழியான் என்றும் *
    அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் ** அமுது அன்ன
    சொல் மாலை ஏத்தித் * தொழுதேன் சொலப்பட்ட *
    நல் மாலை ஏத்தி நவின்று 85
  • IT 86
    2267 நவின்று உரைத்த நாவலர்கள் * நாள் மலர் கொண்டு * ஆங்கே
    பயின்றதனால் பெற்ற பயன் என்கொல்? ** பயின்றார் தம்
    மெய்த் தவத்தால் * காண்பு அரிய மேக மணி வண்ணனை * யான்
    எத் தவத்தால் காண்பன் கொல் இன்று? 86
  • IT 87
    2268 இன்றா அறிகின்றேன் அல்லேன் * இரு நிலத்தைச்
    சென்று ஆங்கு அளந்த திருவடியை ** அன்று
    கருக்கோட்டியுள் கிடந்து * கைதொழுதேன் கண்டேன் *
    திருக்கோட்டி எந்தை திறம் 87
  • IT 88
    2269 திறம்பிற்று இனி அறிந்தேன் * தென் அரங்கத்து எந்தை *
    திறம்பா வழிச் சென்றார்க்கு அல்லால் ** திறம்பாச்
    செடி நரகை நீக்கி * தாம் செல்வதன் முன் * வானோர்
    கடி நகர வாசல் கதவு 88
  • IT 89
    2270 கதவி கதம் சிறந்த * கஞ்சனை முன் காய்ந்து *
    அதவி போர் யானை ஒசித்து ** பதவியாய்ப்
    பாணியால் நீர் ஏற்றுப் * பண்டு ஒருகால் மாவலியை *
    மாணியாய்க் கொண்டிலையே மண்? 89
  • IT 90
    2271 மண்ணுலகம் ஆளேனே ? * வானவர்க்கும் வானவனாய் *
    விண்ணுலகம் தன் அகத்தும் மேவேனே? ** நண்ணித்
    திருமாலைச் * செங்கண் நெடியானை * எங்கள்
    பெருமானைக் கை தொழுத பின் 90
  • IT 91
    2272 பின்னால் அரு நரகம் * சேராமல் பேதுறுவீர் *
    முன்னால் வணங்க முயல்மினோ ** பல் நூல்
    அளந்தானைக் * கார்க் கடல் சூழ் ஞாலத்தை * எல்லாம்
    அளந்தான் அவன் சேவடி 91
  • IT 92
    2273 அடியால் முன் கஞ்சனைச் செற்று * அமரர் ஏத்தும்
    படியான் * கொடிமேல் புள் கொண்டான் ** நெடியான் தன்
    நாமமே * ஏத்துமின்கள் ஏத்தினால் * தாம் வேண்டும்
    காமமே காட்டும் கடிது 92
  • IT 93
    2274 கடிது கொடு நரகம் * பிற்காலும் செய்கை *
    கொடிது என்று அது கூடா முன்னம் ** வடி சங்கம்
    கொண்டானைக் * கூந்தல் வாய் கீண்டானை * கொங்கை நஞ்சு
    உண்டானை ஏத்துமினோ உற்று 93
  • IT 94
    2275 உற்று வணங்கித் தொழுமின் * உலகு ஏழும்
    முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் ** பற்றிப்
    பொருந்தாதான் மார்பு இடந்து * பூம் பாடகத்துள்
    இருந்தானை * ஏத்தும் என் நெஞ்சு 94
  • IT 95
    2276 என் நெஞ்சம் மேயான் * என் சென்னியான் * தானவனை
    வல் நெஞ்சம் கீண்ட மணி வண்ணன் ** முன்னம் சேய்
    ஊழியான் * ஊழி பெயர்த்தான் * உலகு ஏத்தும்
    ஆழியான் அத்தியூரான் 95
  • IT 96
    2277 ## அத்தியூரான் புள்ளை ஊர்வான் * அணி மணியின்
    துத்தி சேர் * நாகத்தின்மேல் துயில்வான் ** முத்தீ
    மறை ஆவான் * மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் *
    இறை ஆவான் எங்கள் பிரான் 96
  • IT 97
    2278 எங்கள் பெருமான் * இமையோர் தலைமகன்! நீ *
    செங்கண் நெடு மால் திருமார்பா! ** பொங்கு
    பட மூக்கின் ஆயிர வாய்ப் * பாம்பு அணைமேல் சேர்ந்தாய் *
    குடமூக்கில் கோயிலாக் கொண்டு 97
  • IT 98
    2279 கொண்டு வளர்க்கக் * குழவியாய்த் தான் வளர்ந்தது *
    உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க ** கொண்டு
    குடம் ஆடிக் * கோவலனாய் மேவி * என் நெஞ்சம்
    இடமாகக் கொண்ட இறை 98
  • IT 99
    2280 ## இறை எம் பெருமான் ! அருள் என்று * இமையோர்
    முறை நின்று * மொய்ம் மலர்கள் தூவ ** அறை கழல
    சேவடியான் * செங்கண் நெடியான் * குறள் உருவாய்
    மாவடிவின் மண் கொண்டான் மால் 99
  • IT 100
    2281 ## மாலே நெடியோனே! கண்ணனே ! * விண்ணவர்க்கு
    மேலா! * வியன் துழாய்க் கண்ணியனே ! ** மேலால்
    விளவின் காய் * கன்றினால் வீழ்த்தவனே! * என் தன்
    அளவு அன்றால் யானுடைய அன்பு 100