Nānmuhan Thiruvandāthi

நான்முகன் திருவந்தாதி

Nānmuhan Thiruvandāthi
Thirumazhisai āzhvār, a contemporary of the Mudhal āzhvārs, composed this Nanmugan Thiruvanthathi, which consists of 96 verses. While the first āzhvārs preached the devotion and knowledge required to attain the Supreme Brahman, Thirumazhisai āzhvār, by uprooting the fallacies of other religions such as the Sunyavadis, reinforces the concept of the Supreme. + Read more
முதலாழ்வார்களின் சமகாலத்தவரான திருமழிசை ஆழ்வார் இயற்றிய இந்த நான்முகன் திருவந்தாதி 96 பாசுரங்கள் உடையது. முதல் ஆழ்வார்கள் பரப்பிரமத்தை அடைவதற்கு வேண்டிய பக்தி, ஞானத்தை உபதேசித்தனர். பிற மதத்தவர்களாகிய சூன்யவாதிகள் போன்ற களையைப் பிடுங்கி பரத்துவத்தை உறுதிப்படுத்துகிறார். அனைவரும் பகவத் + Read more
Group: 3rd 1000
Verses: 2382 to 2477
Glorification: Antaryāmi / Immanent State (அந்தர்யாமி)
  • தனியன் / Taniyan
  • NMT 1
    2382 ## நான்முகனை * நாராயணன் படைத்தான் * நான்முகனும்
    தான் முகமாய்ச் * சங்கரனைத் தான் படைத்தான் ** யான் முகமாய்
    அந்தாதி மேலிட்டு * அறிவித்தேன் ஆழ் பொருளை *
    சிந்தாமல் கொள்மின் நீர் தேர்ந்து 1
  • NMT 2
    2383 தேருங்கால் தேவன் * ஒருவனே என்று உரைப்பர் *
    ஆரும் அறியார் அவன் பெருமை ** ஓரும்
    பொருள் முடிவும் இத்தனையே * எத் தவம் செய்தார்க்கும் *
    அருள் முடிவது ஆழியான்பால் 2
  • NMT 3
    2384 பாலில் கிடந்ததுவும் * பண்டு அரங்கம் மேயதுவும் *
    ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார்? ** ஞாலத்து
    ஒரு பொருளை * வானவர் தம் மெய்ப் பொருளை * அப்பில்
    அரு பொருளை யான் அறிந்த ஆறு (3)
  • NMT 4
    2385 ஆறு சடைக் கரந்தான் * அண்டர்கோன் தன்னோடும் *
    கூறு உடையன் என்பதுவும் கொள்கைத்தே ** வேறு ஒருவர்
    இல்லாமை * நின்றானை எம்மானை * எப் பொருட்கும்
    சொல்லானைச் சொன்னேன் தொகுத்து (4)
  • NMT 5
    2386 தொகுத்த வரத்தனாய்த் * தோலாதான் மார்வம் *
    வகிர்த்த வளை உகிர்த் தோள் மாலே ** உகத்தில்
    ஒரு நான்று நீ உயர்த்தி * உள் வாங்கி நீயே *
    அரு நான்கும் ஆனாய் அறி 5
  • NMT 6
    2387 அறியார் சமணர் * அயர்த்தார் பவுத்தர் *
    சிறியார் சிவப்பட்டார் செப்பில் ** வெறியாய
    மாயவனை மாலவனை * மாதவனை ஏத்தார் *
    ஈனவரே ஆதலால் இன்று 6
  • NMT 7
    2388 இன்று ஆக * நாளையே ஆக * இனிச் சிறிதும்
    நின்று ஆக * நின் அருள் என் பாலதே ** நன்றாக
    நான் உன்னை * அன்றி இலேன் கண்டாய் * நாரணனே
    நீ என்னை அன்றி இலை 7
  • NMT 8
    2389 இலை துணை மற்று என் நெஞ்சே! * ஈசனை வென்ற *
    சிலை கொண்ட செங்கண் மால் சேரா ** குலை கொண்ட
    ஈர் ஐந்தலையான் * இலங்கையை ஈடு அழித்த *
    கூர் அம்பன் அல்லால் குறை 8
  • NMT 9
    2390 குறைகொண்டு நான்முகன் * குண்டிகை நீர் பெய்து *
    மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி ** கறைகொண்ட
    கண்டத்தான் * சென்னிமேல் ஏறக் கழுவினான் *
    அண்டத்தான் சேவடியை ஆங்கு 9
  • NMT 10
    2391 ஆங்கு ஆரவாரம் * அது கேட்டு * அழல் உமிழும்
    பூங் கார் அரவு அணையான் பொன் மேனி ** யாம் காண
    வல்லமே அல்லமே? * மா மலரான் வார் சடையான் *
    வல்லரே அல்லரே? வாழ்த்து 10
  • NMT 11
    2392 வாழ்த்துக வாய் * காண்க கண் கேட்க செவி * மகுடம்
    தாழ்த்தி * வணங்குமின்கள் தண் மலரால் ** சூழ்த்த
    துழாய் மன்னு நீள் முடி * என் தொல்லை மால் தன்னை *
    வழா வண் கை கூப்பி மதித்து 11
  • NMT 12
    2393 மதித்தாய் போய் நான்கின் * மதியார் போய் வீழ *
    மதித்தாய் மதி கோள் விடுத்தாய் ** மதித்தாய்
    மடுக் கிடந்த * மா முதலை கோள் விடுப்பான் * ஆழி
    விடற்கு இரண்டும் போய் இரண்டின் வீடு 12
  • NMT 13
    2394 வீடு ஆக்கும் * பெற்றி அறியாது * மெய் வருத்திக்
    கூடு ஆக்கி * நின்று உண்டு கொண்டு உழல்வீர் ** வீடு ஆக்கும்
    மெய்ப்பொருள் தான் * வேத முதற்பொருள் தான் * விண்ணவர்க்கு
    நற்பொருள் தான் நாராயணன் 13
  • NMT 14
    2395 நாராயணன் என்னை ஆளி * நரகத்துச்
    சேராமல் * காக்கும் திருமால் ** தன் பேரான
    பேசப் பெறாத * பிணச் சமயர் பேசக் கேட்டு *
    ஆசைப்பட்டு ஆழ்வார் பலர் 14
  • NMT 15
    2396 பல தேவர் ஏத்தப் * படி கடந்தான் பாதம் *
    மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த வலர் ஆகில் **
    மார்க்கண்டன் கண்ட வகையே * வரும் கண்டீர் *
    நீர்க்கண்டன் கண்ட நிலை 15
  • NMT 16
    2397 நிலைமன்னும் என் நெஞ்சம் * அந்நான்று * தேவர்
    தலை மன்னர் * தாமே மாற்றாக ** பல மன்னர்
    போர் மாள * வெம் கதிரோன்மாயப் பொழில் மறைய *
    தேர் ஆழியால் மறைத்தாரால் 16
  • NMT 17
    2398 ஆல நிழற்கீழ் * அற நெறியை * நால்வர்க்கு
    மேலை யுகத்து உரைத்தான் * மெய்த் தவத்தோன் ** ஞாலம்
    அளந்தானை * ஆழிக் கிடந்தானை * ஆல்மேல்
    வளர்ந்தானைத் தான் வணங்குமாறு 17
  • NMT 18
    2399 மாறு ஆய தானவனை * வள் உகிரால் * மார்வு இரண்டு
    கூறாகக் * கீறிய கோளரியை ** வேறாக
    ஏத்தி யிருப்பாரை * வெல்லுமே * மற்று அவரைச்
    சார்த்தியிருப்பார் தவம் 18
  • NMT 19
    2400 தவம் செய்து * நான்முகனால் பெற்ற வரத்தை *
    அவம் செய்த ஆழியாய் அன்றே ** உவந்து எம்மைக்
    காப்பாய் நீ * காப்பதனை ஆவாய் நீ * வைகுந்தம்
    ஈப்பாயும் எவ் உயிர்க்கும் நீ 19
  • NMT 20
    2401 நீயே உலகு எல்லாம் * நின் அருளே நிற்பனவும் *
    நீயே தவத் தேவ தேவனும் ** நீயே
    எரி சுடரும் மால் வரையும் * எண் திசையும் * அண்டத்து
    இரு சுடரும் ஆய இவை 20
  • NMT 21
    2402 இவையா! பில வாய் * திறந்து எரி கான்ற *
    இவையா ! எரிவட்டக் கண்கள் ** இவையா
    எரி பொங்கிக் காட்டும் * இமையோர் பெருமான் *
    அரி பொங்கிக் காட்டும் அழகு (21)
  • NMT 22
    2403 அழகியான் தானே * அரி உருவன் தானே *
    பழகியான் தாளே பணிமின் ** குழவியாய்த்
    தான் ஏழ் உலகுக்கும் * தன்மைக்கும் தன்மையனே *
    மீன் ஆய் உயிர் அளிக்கும் வித்து 22
  • NMT 23
    2404 வித்தும் இடவேண்டும் கொல்லோ? * விடை அடர்த்த *
    பத்தி உழவன் பழம் புனத்து ** மொய்த்து எழுந்த
    கார் மேகம் அன்ன * கரு மால் திருமேனி *
    நீர் வானம் காட்டும் நிகழ்ந்து 23
  • NMT 24
    2405 நிகழ்ந்தாய் * பால் பொன் பசுப்புக் * கார் வண்ணம் நான்கும்
    இகழ்ந்தாய் * இருவரையும் வீய ** புகழ்ந்தாய்
    சினப் போர்ச் சுவேதனைச் * சேனாபதியாய் *
    மனப் போர் முடிக்கும் வகை 24
  • NMT 25
    2406 வகையால் மதியாது * மண் கொண்டாய் * மற்றும்
    வகையால் * வருவது ஒன்று உண்டே ** வகையால்
    வயிரம் குழைத்து உண்ணும் * மாவலி தான் என்னும் *
    வயிர வழக்கு ஒழித்தாய் மற்று 25
  • NMT 26
    2407 மற்றுத் தொழுவார் * ஒருவரையும் யான் இன்மை *
    கற்றைச் சடையான் கரிக் கண்டாய் ** எற்றைக்கும்
    கண்டுகொள் கண்டாய் * கடல்வண்ணா! * யான் உன்னைக்
    கண்டு கொளகிற்குமாறு 26
  • NMT 27
    2408 மால் தான் புகுந்த * மட நெஞ்சம் * மற்றதுவும்
    பேறாகக் * கொள்வனோ ? பேதைகாள்! ** நீறாடி
    தான் காண மாட்டாத * தார் அகலச் சேவடியை *
    யான் காண வல்லேற்கு இது 27
  • NMT 28
    2409 இது இலங்கை ஈடு அழியக் * கட்டிய சேது *
    இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் ** இது இலங்கை
    தான் ஒடுங்க வில் நுடங்கத் * தண் தார் இராவணனை *
    ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு 28
  • NMT 29
    2410 உகப்பு உருவன் தானே * ஒளி உருவன் தானே *
    மகப்பு உருவன் தானே மதிக்கில் ** மிகப் புருவம்
    ஒன்றுக்கு ஒன்று * ஓசனையான் வீழ * ஒரு கணையால்
    அன்றிக்கொண்டு எய்தான் அவன் 29
  • NMT 30
    2411 அவன் என்னை ஆளி * அரங்கத்து அரங்கில் *
    அவன் என்னை எய்தாமல் காப்பான் ** அவன் என்னது
    உள்ளத்து * நின்றான் இருந்தான் கிடக்குமே *
    வெள்ளத்து அரவு அணையின்மேல் 30
  • NMT 31
    2412 மேல் நான்முகன் * அரனை இட்ட விடு சாபம் *
    தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் ** வானோர்
    பெருமானை * ஏத்தாத பேய்காள் ! * பிறக்கும்
    கரு மாயம் பேசின் கதை (31)
  • NMT 32
    2413 கதைப் பொருள் தான் * கண்ணன் திருவயிற்றின் உள்ள *
    உதைப்பளவு போது போக்கு இன்றி ** வதைப் பொருள் தான்
    வாய்ந்த குணத்துப் * படாதது அடைமினோ *
    ஆய்ந்த குணத்தான் அடி 32
  • NMT 33
    2414 அடிச் சகடம் சாடி * அரவு ஆட்டி * யானை
    பிடித்து ஒசித்துப் * பேய் முலை நஞ்சு உண்டு ** வடிப் பவள
    வாய்ப் பின்னை தோளிக்கா * வல் ஏற்று எருத்து இறுத்து *
    கோ பின்னும் ஆனான் குறிப்பு 33
  • NMT 34
    2415 குறிப்பு எனக்குக் * கோட்டியூர் மேயானை ஏத்த *
    குறிப்பு எனக்கு நன்மை பயக்க ** வெறுப்பனோ?
    வேங்கடத்து மேயானை * மெய் வினை நோய் எய்தாமல் *
    தான் கடத்தும் தன்மையான் தாள் 34
  • NMT 35
    2416 ## தாளால் உலகம் * அளந்த அசைவே கொல்? *
    வாளா கிடந்தருளும் வாய்திறவான் ** நீள் ஓதம்
    வந்து அலைக்கும் மா மயிலை * மாவல்லிக் கேணியான் *
    ஐந்தலை வாய் நாகத்து அணை 35
  • NMT 36
    2417 ## நாகத்து அணைக் குடந்தை * வெஃகா திரு எவ்வுள் *
    நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில் ** நாகத்து
    அணைப் பாற்கடல் கிடக்கும் * ஆதி நெடுமால் *
    அணைப்பார் கருத்தன் ஆவான் (36)
  • NMT 37
    2418 வான் உலவு தீவளி * மா கடல் மா பொருப்பு *
    தான் உலவு வெம் கதிரும் தண் மதியும் ** மேல் நிலவு
    கொண்டல் பெயரும் * திசை எட்டும் சூழ்ச்சியும் *
    அண்டம் திருமால் அகைப்பு 37
  • NMT 38
    2419 அகைப்பு இல் மனிசரை * ஆறு சமயம்
    புகைத்தான் * பொரு கடல் நீர் வண்ணன் ** உகைக்குமேல்
    எத் தேவர் வாலாட்டும் * எவ்வாறு செய்கையும் *
    அப்போது ஒழியும் அழைப்பு 38
  • NMT 39
    2420 அழைப்பன் * திருவேங்கடத்தானைக் காண *
    இழைப்பன் * திருக்கூடல் கூட ** மழைப் பேர்
    அருவி * மணி வரன்றி வந்து இழிய * யானை
    வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு 39
  • NMT 40
    2421 வெற்பு என்று * வேங்கடம் பாடினேன் * வீடு ஆக்கி
    நிற்கின்றேன் * நின்று நினைக்கின்றேன் ** கற்கின்ற
    நூல் வலையில் பட்டிருந்த * நூலாட்டி கேள்வனார் *
    கால் வலையில் பட்டிருந்தேன் காண் 40
  • NMT 41
    2422 காணல் உறுகின்றேன் * கல் அருவி முத்து உதிர *
    ஓண விழவில் ஒலி அதிர ** பேணி
    வரு வேங்கடவா ! * என் உள்ளம் புகுந்தாய் *
    திருவேங்கடம் அதனைச் சென்று (41)
  • NMT 42
    2423 சென்று வணங்குமினோ * சேண் உயர் வேங்கடத்தை *
    நின்று வினை கெடுக்கும் நீர்மையால் ** என்றும்
    கடிக் கமல நான்முகனும் * கண் மூன்றத்தானும் *
    அடிக் கமலம் இட்டு ஏத்தும் அங்கு 42
  • NMT 43
    2424 மங்குல் தோய் சென்னி * வட வேங்கடத்தானை *
    கங்குல் புகுந்தார்கள் * காப்பு அணிவான் ** திங்கள்
    சடை ஏற வைத்தானும் * தாமரை மேலானும் *
    குடை ஏற தாம் குவித்துக் கொண்டு (43)
  • NMT 44
    2425 கொண்டு குடங்கால் * மேல் வைத்த குழவியாய் *
    தண்ட அரக்கன் தலை தாளால் பண்டு எண்ணி *
    போம் குமரன் நிற்கும் * பொழில் வேங்கட மலைக்கே *
    போம் குமரருள்ளீர்! புரிந்து 44
  • NMT 45
    2426 புரிந்து மலர் இட்டுப் * புண்டரீகப் பாதம் *
    பரிந்து படுகாடு நிற்ப ** தெரிந்து எங்கும்
    தான் ஓங்கி நிற்கின்றான் * தண் அருவி வேங்கடமே *
    வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு 45
  • NMT 46
    2427 வைப்பன் மணி விளக்கா * மா மதியை * மாலுக்கு என்று
    எப்பொழுதும் * கை நீட்டும் யானையை ** எப்பாடும்
    வேடு வளைக்கக் * குறவர் வில் எடுக்கும் வேங்கடமே *
    நாடு வளைத்து ஆடுது மேல் நன்று 46
  • NMT 47
    2428 நன் மணி வண்ணன் ஊர் * ஆளியும் கோளரியும் *
    பொன் மணியும் முத்தமும் பூ மரமும் ** பன்மணி நீ
    ரோடு பொருது உருளும் * கானமும் வானரமும் *
    வேடும் உடை வேங்கடம் (47)
  • NMT 48
    2429 வேங்கடமே * விண்ணோர் தொழுவதுவும் * மெய்ம்மையால்
    வேங்கடமே * மெய் வினை நோய் தீர்ப்பதுவும் ** வேங்கடமே
    தானவரை வீழத் * தன் ஆழிப் படை தொட்டு *
    வானவரைக் காப்பான் மலை 48
  • NMT 49
    2430 மலை ஆமைமேல் வைத்து * வாசுகியைச் சுற்றி *
    தலை ஆமை தான் ஒரு கை பற்றி ** அலையாமல்
    பீறக் கடைந்த * பெருமான் திரு நாமம் *
    கூறுவதே யாவர்க்கும் கூற்று (49)
  • NMT 50
    2431 கூற்றமும் சாரா * கொடு வினையும் சாரா * தீ
    மாற்றமும் சாரா வகை அறிந்தேன் ** ஆற்றங்
    கரைக் கிடக்கும் * கண்ணன் கடல் கிடக்கும் * மாயன்
    உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு 50
  • NMT 51
    2432 எனக்கு ஆவார் ஆர் ஒருவரே? * எம் பெருமான்
    தனக்கு ஆவான் * தானே மற்று அல்லால் ** புனக் காயா
    வண்ணனே ! * உன்னைப் பிறர் அறியார் * என் மதிக்கு
    விண் எல்லாம் உண்டோ விலை 51
  • NMT 52
    2433 விலைக்கு ஆட்படுவர் * விசாதி ஏற்று உண்பர் *
    தலைக்கு ஆட்பலி திரிவர் தக்கோர் ** முலைக் கால்
    விடம் உண்ட வேந்தனையே * வேறா ஏத்தாதார் *
    கடம் உண்டார் கல்லாதவர் (52)
  • NMT 53
    2434 கல்லாதவர் இலங்கை கட்டழித்த * காகுத்தன்
    அல்லால் * ஒரு தெய்வம் யான் இலேன் ** பொல்லாத
    தேவரைத் * தேவர் அல்லாரை * திருவு இல்லாத்
    தேவரைத் தேறேல்மின் தேவு 53
  • NMT 54
    2435 தேவராய் * நிற்கும் அத் தேவும் * அத் தேவரில்
    மூவராய் நிற்கும் * முது புணர்ப்பும் ** யாவராய்
    நிற்கின்றது எல்லாம் * நெடுமால் என்று ஓராதார் *
    கற்கின்றது எல்லாம் கடை 54
  • NMT 55
    2436 கடை நின்று அமரர் கழல் தொழுது * நாளும்
    இடைநின்ற * இன்பத்தர் ஆவர் ** புடைநின்ற
    நீர் ஓத மேனி * நெடுமாலே ! * நின் அடியை
    யார் ஓத வல்லார் அவர்? 55
  • NMT 56
    2437 அவர் இவர் என்று இல்லை * அனங்க வேள் தாதைக்கு *
    எவரும் எதிர் இல்லை கண்டீர் ** உவரிக்
    கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று * வாணற்கு
    உடன் நின்று தோற்றான் ஒருங்கு 56
  • NMT 57
    2438 ஒருங்கு இருந்த நல் வினையும் * தீவினையும் ஆவான் *
    பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் ** மருங்கு இருந்த
    வானவர் தாம் தானவர் தாம் * தாரகை தான் * என் நெஞ்சம்
    ஆனவர் தாம் அல்லாதது என்? 57
  • NMT 58
    2439 என் நெஞ்சம் மேயான் * இருள் நீக்கி எம்பிரான் *
    மன் அஞ்ச முன் ஒருநாள் மண் அளந்தான் ** என் நெஞ்சம்
    மேயானை * இல்லா விடை ஏற்றான் * வெவ்வினை தீர்த்து
    ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு 58
  • NMT 59
    2440 அன்பு ஆவாய் * ஆர் அமுதம் ஆவாய் * அடியேனுக்கு
    இன்பு ஆவாய் * எல்லாமும் நீ ஆவாய் ** பொன் பாவை
    கேள்வா! * கிளர் ஒளி என் கேசவனே * கேடு இன்றி
    ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் 59
  • NMT 60
    2441 ஆள் பார்த்து உழிதருவாய் * கண்டுகொள் என்றும் * நின்
    தாள் பார்த்து உழி தருவேன் தன்மையை ** கேட்பார்க்கு
    அரும் பொருளாய் * நின்ற அரங்கனே! * உன்னை
    விரும்புவதே விள்ளேன் மனம் 60
  • NMT 61
    2442 மனக் கேதம் சாரா * மதுசூதன் தன்னை *
    தனக்கே தான் தஞ்சமாக் கொள்ளில் ** எனக்கே தான்
    இன்று ஒன்றி நின்று உலகை * ஏழ் ஆணை ஓட்டினான் *
    சென்று ஒன்றி நின்ற திரு 61
  • NMT 62
    2443 திரு நின்ற பக்கம் * திறவிது என்று ஓரார் *
    கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் ** திருவு இருந்த
    மார்வன் * சிரீதரன் தன் வண்டு உலவு தண் துழாய் *
    தார் தன்னைச் சூடித் தரித்து 62
  • NMT 63
    2444 தரித்திருந்தேன் ஆகவே * தாரா கணப் போர் *
    விரித்து உரைத்த வெம் நாகத்து உன்னை ** தெரித்து எழுதி
    வாசித்தும் கேட்டும் * வணங்கி வழிபட்டும் *
    பூசித்தும் போக்கினேன் போது 63
  • NMT 64
    2445 போதான * இட்டு இறைஞ்சி ஏத்துமினோ * பொன் மகரக்
    காதானை * ஆதிப் பெருமானை ** நாதானை
    நல்லானை நாரணனை * நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
    சொல்லானை * சொல்லுவதே சூது 64
  • NMT 65
    2446 சூது ஆவது என் நெஞ்சத்து எண்ணினேன் * சொல் மாலை
    மாது ஆய * மாயவனை மாதவனை ** யாதானும்
    வல்லவா * சிந்தித்திருப்பேற்கு * வைகுந்தத்து
    இல்லையோ சொல்லீர் இடம்? 65
  • NMT 66
    2447 இடம் ஆவது * என் நெஞ்சம் இன்றெல்லாம் * பண்டு
    பட நாகணை * நெடிய மாற்கு ** திடமாக
    வையேன் * மதிசூடி தன்னோடு * அயனை நான்
    வையேன் ஆட் செய்யேன் வலம் (66)
  • NMT 67
    2448 வலம் ஆக * மாட்டாமை தான் ஆக * வைகல்
    குலம் ஆக * குற்றம் தான் ஆக ** நலம் ஆக
    நாரணனை நா பதியை * ஞானப் பெருமானை *
    சீரணனை ஏத்தும் திறம் 67
  • NMT 68
    2449 திறம்பேன்மின் கண்டீர் * திருவடி தன் நாமம் *
    மறந்தும் புரம் தொழா மாந்தர் ** இறைஞ்சியும்
    சாதுவராய்ப் * போதுமின்கள் என்றான் * நமனும் தன்
    தூதுவரைக் கூவிச் செவிக்கு (68)
  • NMT 69
    2450 செவிக்கு இன்பம் ஆவதுவும் * செங்கண் மால் நாமம் *
    புவிக்கும் புவி அதுவே கண்டீர் ** கவிக்கு
    நிறை பொருளாய் * நின்றானை நேர்பட்டேன் * பார்க்கில்
    மறைப் பொருளும் அத்தனையே தான் 69
  • NMT 70
    2451 தான் ஒருவன் ஆகித் * தரணி இடந்து எடுத்து *
    ஏன் ஒருவனாய் எயிற்றில் தாங்கியதும் ** யான் ஒருவன்
    இன்றா அறிகின்றேன் அல்லேன் * இரு நிலத்தைச்
    சென்று ஆங்கு அடிப்படுத்த சேய் 70
  • NMT 71
    2452 சேயன் அணியன் * சிறியன் மிகப் பெரியன் *
    ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் ** அன்று
    ஓதிய * வாக்கு அதனைக் கல்லார் * உலகத்தில்
    ஏதிலர் ஆம் மெய்ஞ் ஞானம் இல் (71)
  • NMT 72
    2453 இல்லறம் இல்லேல் * துறவறம் இல் என்னும் *
    சொல் அறம் அல்லனவும் சொல் அல்ல ** நல்லறம்
    ஆவனவும் * நால் வேத மாத் தவமும் * நாரணனே
    ஆவது ஈது அன்று என்பார் ஆர்? (72)
  • NMT 73
    2454 ஆரே அறிவார்? * அனைத்து உலகும் உண்டு உமிழ்ந்த *
    பேர் ஆழியான் தன் பெருமையை ** கார் செறிந்த
    கண்டத்தான் * எண் கண்ணான் காணான் * அவன் வைத்த
    பண்டைத் தானத்தின் பதி 73
  • NMT 74
    2455 பதிப் பகைஞர்க்கு ஆற்றாது * பாய் திரை நீர்ப் பாழி *
    மதித்து அடைந்த வாள் அரவம் தன்னை ** மதித்து அவன் தன்
    வல் ஆகத்து ஏற்றிய * மா மேனி மாயவனை *
    அல்லாது ஒன்று ஏத்தாது என் நா 74
  • NMT 75
    2456 நாக் கொண்டு மானிடம் பாடேன் நலம் ஆகத்
    தீக் கொண்ட * செஞ்சடையான் சென்று ** என்றும் பூக் கொண்டு
    வல்லவாறு * ஏத்த மகிழாத * வைகுந்தச்
    செல்வனார் * சேவடிமேல் பாட்டு 75
  • NMT 76
    2457 பாட்டும் முறையும் * படு கதையும் பல் பொருளும் *
    ஈட்டிய தீயும் இரு விசும்பும் ** கேட்ட
    மனுவும் * சுருதி மறை நான்கும் * மாயன்
    தன மாயையில் பட்ட தற்பு (76)
  • NMT 77
    2458 தற்பு என்னைத் * தான் அறியானேலும் * தடங் கடலைக்
    கல் கொண்டு தூர்த்த கடல் வண்ணன் ** என் கொண்ட
    வெவ்வினையும் நீங்க * விலங்கா மனம் வைத்தான் *
    எவ் வினையும் மாயுமால் கண்டு 77
  • NMT 78
    2459 கண்டு வணங்கினார்க்கு * என்னாம்கொல் ? * காமன் உடல்
    கொண்ட * தவத்தாற்கு உமை உணர்த்த ** வண்டு அலம்பும்
    தார் அலங்கல் நீள் முடியான் * தன் பெயரே கேட்டிருந்து * அங்கு
    ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து 78
  • NMT 79
    2460 ஆய்ந்துகொண்டு * ஆதிப் பெருமானை * அன்பினால்
    வாய்ந்த * மனத்து இருத்த வல்லார்கள் ** ஏய்ந்த தம்
    மெய் குந்தம் ஆக * விரும்புவரே * தாமும் தம்
    வைகுந்தம் காண்பார் விரைந்து 79
  • NMT 80
    2461 விரைந்து அடைமின் மேல் ஒரு நாள் * வெள்ளம் பரக்க *
    கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் ** பரந்து உலகம் *
    பாடின ஆடின கேட்டு * படு நரகம்
    வீடின வாசல் கதவு 80
  • NMT 81
    2462 கதவு மனம் என்றும் * காணலாம் என்றும் *
    குதையும் வினை ஆவி தீர்ந்தேன் ** விதை ஆக
    நல் தமிழை வித்தி * என் உள்ளத்தை நீ விளைத்தாய் *
    கற்ற மொழி ஆகிக் கலந்து 81
  • NMT 82
    2463 கலந்தான் என் உள்ளத்துக் * காம வேள் தாதை *
    நலம் தானும் ஈது ஒப்பது உண்டே? ** அலர்ந்தலர்கள்
    இட்டு ஏத்தும் * ஈசனும் நான்முகனும் * என்றிவர்கள்
    விட்டு ஏத்த மாட்டாத வேந்து 82
  • NMT 83
    2464 வேந்தர் ஆய் விண்ணவர் ஆய் * விண் ஆகி தண்ணளி ஆய் *
    மாந்தர் ஆய் மாது ஆய் மற்று எல்லாம் ஆய் ** சார்ந்தவர்க்குத்
    தன் ஆனால் தான் நேமியான் * மால் வண்ணன் தான் கொடுக்கும் *
    பின்னால் தான் செய்யும் பிதிர் 83
  • NMT 84
    2465 பிதிரும் மனம் இலேன் * பிஞ்ஞகன் தன்னோடு
    எதிர்வன் * அவன் எனக்கு நேரான் ** அதிரும்
    கழல் கால மன்னனையே * கண்ணனையே * நாளும்
    தொழக் காதல் பூண்டேன் தொழில் (84)
  • NMT 85
    2466 தொழில் எனக்குத் * தொல்லை மால் தன் நாமம் ஏத்த *
    பொழுது எனக்கு மற்று அதுவே போதும் ** கழி சினத்த
    வல்லாளன் * வானரக் கோன் வாலி மதன் அழித்த *
    வில்லாளன் நெஞ்சத்து உளன் 85
  • NMT 86
    2467 உளன் கண்டாய் நல் நெஞ்சே! * உத்தமன் என்றும்
    உளன் கண்டாய் * உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் **
    தன் ஒப்பான் தான் ஆய் * உளன் காண் தமியேற்கு *
    என் ஒப்பார்க்கு ஈசன் இமை 86
  • NMT 87
    2468 இமயப் பெரு மலை போல் * இந்திரனார்க்கு இட்ட *
    சமய விருந்து உண்டு ஆர் காப்பார்? ** சமயங்கள்
    கண்டான் அவை காப்பான் * கார்க்கண்டன் நான்முகனோடு *
    உண்டான் உலகோடு உயிர் 87
  • NMT 88
    2469 உயிர் கொண்டு உடல் ஒழிய * ஓடும் போது ஓடி *
    அயர்வு என்ற தீர்ப்பான் பேர் பாடி ** செயல் தீரச்
    சிந்தித்து * வாழ்வாரே வாழ்வார் * சிறு சமயப்
    பந்தனையார் வாழ்வேல் பழுது (88)
  • NMT 89
    2470 பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் * பாற்கடலான் பாதம் *
    வழுவாவகை நினைந்து வைகல் தொழுவாரை **
    கண்டு இறைஞ்சி வாழ்வார் * கலந்த வினை கெடுத்து *
    விண் திறந்து வீற்றிருப்பார் மிக்கு 89
  • NMT 90
    2471 வீற்றிருந்து * விண் ஆள வேண்டுவார் * வேங்கடத்தான்
    பால் திருந்த வைத்தாரே பல் மலர்கள் ** மேல் திருந்த
    வாழ்வார் * வரும் மதி பார்த்து அன்பினராய் * மற்று அவற்கே
    தாழ்வாய் இருப்பார் தமர் 90
  • NMT 91
    2472 தமர் ஆவார் யாவர்க்கும் * தாமரை மேலாற்கும் *
    அமரர்க்கும் ஆடு அரவு ஆர்த்தாற்கும் ** அமரர்கள்
    தாள் தாமரை * மலர்கள் இட்டு இறைஞ்சி * மால் வண்ணன்
    தாள் தாமரை அடைவோம் என்று 91
  • NMT 92
    2473 என்றும் மறந்தறியேன் * என் நெஞ்சத்தே வைத்து *
    நின்றும் இருந்தும் நெடுமாலை ** என்றும்
    திருவு இருந்த மார்பன் * சிரீதரனுக்கு ஆளாய் *
    கருவு இருந்த நாள் முதலாக் காப்பு (92)
  • NMT 93
    2474 காப்பு மறந்தறியேன் * கண்ணனே என்று இருப்பன் *
    ஆப்பு அங்கு ஒழியவும் பல் உயிர்க்கும் ** ஆக்கை
    கொடுத்து அளித்த ** கோனே! குணப்பரனே! * உன்னை
    விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம் 93
  • NMT 94
    2475 மெய் தெளிந்தார் என் செய்யார்? * வேறு ஆனார் நீறு ஆக *
    கை தெளிந்து காட்டிக் களப்படுத்து ** பை தெளிந்த
    பாம்பின் அணையாய் ! * அருளாய் அடியேற்கு *
    வேம்பும் கறி ஆகும் ஏன்று 94
  • NMT 95
    2476 ## ஏன்றேன் அடிமை * இழிந்தேன் பிறப்பு இடும்பை *
    ஆன்றேன் அமரர்க்கு அமராமை ** ஆன்றேன்
    கடன் நாடும் மண் நாடும் * கைவிட்டு * மேலை
    இடம் நாடு காண இனி 95
  • NMT 96
    2477 ## இனி அறிந்தேன் * ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் *
    இனி அறிந்தேன் எம் பெருமான்! உன்னை ** இனி அறிந்தேன்
    காரணன் நீ கற்றவை நீ * கற்பவை நீ * நல் கிரிசை
    நாரணன் நீ * நன்கு அறிந்தேன் நான் 96