Your browser does not support the audio element.
audio
3310 ஆராவமுதே! அடியேனுடலம் நின்பாலன்பாயே *
நீராயலைந்துகரைய உருக்குகின்றநெடுமாலே! *
சீரார்செந்நெல்கவரிவீசும் செழுநீர்த்திருகுடந்தை *
ஏரார்கோலந்திகழக்கிடந்தாய்! கண்டேன் எம்மானே! (2)
3311 எம்மானே! என்வெள்ளைமூர்த்தி! என்னையாள்வானே! *
எம்மாவுருவும்வேண்டுமாற்றால் ஆவாய்! எழிலேறே! *
செம்மாகமலம்செழுநீர்மிசைக்கண்மலரும் திருக்குடந்தை *
அம்மாமலர்க்கண்வளர்கின்றானே! என்நான் செய்கேனே?!
3312 என்நான்செய்கேன்? யாரேகளைகண்? என்னையென் செய்கின்றாய்? *
உன்னாலல்லால்யாவராலும் ஒன்றும்குறைவேண்டேன் *
கன்னார்மதிள்சூழ்குடந்தைக்கிடந்தாய்! அடியேனரு வாணாள் *
சென்னாளெந்நாள்? அந்நாள் உன்தாள்பிடித்தே செலக்காணே.
3313 செலக்காண்கிற்பார்காணுமளவும் செல்லும்கீர்த்தியாய்! *
உலப்பிலானே! எல்லாவுலகுமுடையஒருமூர்த்தி! *
நலத்தால்மிக்கார்குடந்தைக்கிடந்தாய்! உன்னைக் காண்பான்நான்
அலப்பாய் * ஆகாசத்தைநோக்கி அழுவன்தொழுவனே.
3314 அழுவன்தொழுவன்ஆடிக்காண்பன் பாடியலற்றுவன் *
தழுவல்வினையால்பக்கம்நோக்கி நாணிக்கவிழ்ந்திருப்பன் *
செழுவொண்பழனக்குடந்தைக்கிடந்தாய்! செந்தாமரைக்கண்ணா! *
தொழுவனேனைஉனதாள் சேரும்வகையேசூழ்கண்டாய்.
3315 சூழ்கண்டாய்என்தொல்லைவினையையறுத்து உன்னடிசேரும்
ஊழ்கண்டிருந்தே * தூராக்குழிதூர்த்து எனைநாள கன்றிருப்பன்? *
வாழ்தொல்புகழார்குடந்தைக்கிடந்தாய்! வானோர் கோமானே! *
யாழினிசையே! அமுதே! அறிவின்பயனே அரியேறே!
3316 அரியேறே என்னம்பொற்சுடரே! செங்கட்கருமுகிலே! *
எரியே! பவளக்குன்றே! நாள்தோளெந்தாய்! உனதருளே! *
பிரியாவடிமையென்னைக்கொண்டாய்! குடந்தைத் திருமாலே! *
தரியேனினிஉன்சரணந்தந்து என் சன்மம்களையாயே.
3317 களைவாய்துன்பம்களையாதொழிவாய் களைகண்மற்றிலேன் *
வளைவாய்நேமிப்படையாய்! குடந்தைக்கிடந்தமாமாயா! *
தளராவுடலமெனதாவி சரிந்துபோம்போது *
இளையாதுனதாள்ஒருங்கப்பிடித்துப் போதஇசைநீயே.
3318 இசைவித்தென்னையுன்தாளிணைக்கீழ் இருத்தும் அம்மானே! *
அசைவிலமரர்தலைவர்தலைவா! ஆதிப்பெருமூர்த்தி! *
திசைவில்வீசுஞ்செழுமாமணிகள்சேரும் திருக்குடந்தை *
அசைவிலுலகம்பரவக்கிடந்தாய்! காணவாராயே.
3319 வாராவருவாய்வருமென்மாயா! மாயாமூர்த்தியாய்! *
ஆராவமுதாய் அடியேனாவி அகமேதித்திப்பாய் *
தீராவினைகள்தீரஎன்னையாண்டாய்! திருக்குடந்தை
ஊரா! * உனக்காட்பட்டும் அடியேன்இன்னமுழல்வேனோ? (2)
3320 உழலையென்பின்பேய்ச்சிமுலையூடு அவளையுயிருண்டான் *
கழல்களவையேசரணாக்கொண்ட குருகூர்ச்சடகோபன் *
குழலின்மலியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலைதீரவல்லார் காமர்மானேய்நோக்கியர்க்கே. (2)