Your browser does not support the audio element.
audio
3332 பிறந்தவாறும்வளர்ந்தவாறும் பெரியபாரதம் கைசெய்து * ஐவர்க்குத்
திறங்கள்காட்டியிட்டுச் செய்துபோனமாயங்களும் *
நிறந்தனூடுபுக்குஎனதாவியை நின்றுநின்றுஉருக்கி யுண்கின்ற * இச்
சிறந்தவான்சுடரே! உன்னையென்றுகொல்? சேர்வதுவே. (2)
3333 வதுவைவார்த்தையுளேறுபாய்ந்ததும் மாயமாவினை வாய்பிளந்ததும் *
மதுவைவார்குழலார் குரவைபிணைந்தகுழகும் *
அதுவிதுவுதுவென்னலாவனவல்ல என்னைஉன்செய்கை நைவிக்கும் *
முதுவையமுதல்வா! உன்னையென்றுதலைப்பெய்வனே?
3334 பெய்யும்பூங்குழல் பேய்முலையுண்ட பிள்ளைத்தேற்றமும் பேர்ந்தோர் * சாடிறச்
செய்யபாதமொன்றால் செய்தநின்சிறுச்சேவகமும் *
நெய்யுண்வார்த்தையுள்அன்னைகோல்கொள்ள நீஉன் தாமரைக்கண்கள் நீர்மல்க *
பையவேநிலையும்வந்து என்னெஞ்சைஉருக்குங்களே.
3335 கள்ளவேடத்தைக்கொண்டுபோய்ப் புரம்புக்கவாறும் * கலந்தசுரரை
உள்ளம்பேதஞ்செய்திட்டு உயிருண்டவுபாயங்களும் *
வெள்ளநீர்ச்சடையானும் நின்னிடைவேறலாமைவிளங்க நின்றதும் *
உள்ளமுள்குடைந்து என்னுயிரையுருக்கியுண்ணுமே.
3336 உண்ணவானவர்கோனுக்கு ஆயரொருப்படுத்த வடிசிலுண்டதும் *
வண்ணமால்வரையையெடுத்து மழைகாத்ததும் *
மண்ணைமுன்படைத்துண்டுமிழ்ந்து கடந்திடந்துமணந்த மாயங்கள் *
எண்ணுந்தோறுமென்னெஞ்சு எரிவாய்மெழுகொக்கும் நின்றே.
3337 நின்றவாறும்இருந்தவாறும் கிடந்தவாறும்நினைப்பரியன *
ஒன்றலாஉருவாய் அருவாயநின்மாயங்கள் *
நின்றுநின்றுநினைகின்றேன் உன்னையெங்ஙனம் நினைகிற்பன்? * பாவியேற்கு
ஒன்றுநன்குரையாய் உலகமுண்டவொண்சுடரே!
3338 ஒண்சுடரோடிருளுமாய் நின்றவாறும் உண்மையோடின்மையாய்வந்து * என்
கண்கொளாவகை நீகரந்தென்னைச்செய்கின்றன *
எண்கொள்சிந்தையுள்நைகின்றேன் என்கரியமாணிக்கமே! * என்கண்கட்குத்
திண்கொள்ளஒருநாள் அருளாய்உன்திருவுருவே.
3339 திருவுருவுகிடந்தவாறும் கொப்பூழ்ச்செந்தாமரைமேல் * திசைமுகன்
கருவுள்வீற்றிருந்து படைத்திட்டகருமங்களும் *
பொருவிலுந்தனிநாயகமவை கேட்குந்தோறும் என்னெஞ்சம்நின்று நெக்கு *
அருவிசோரும்கண்ணீர் என்செய்கேன்? அடியேனே.
3340 அடியைமூன்றையிரந்தவாறும் அங்கேநின்றாழ்கடலும் மண்ணும்விண்ணும்
முடிய * ஈரடியால் முடித்துக்கொண்டமுக்கியமும் *
நொடியுமாறவைகேட்குந்தோறும் என்னெஞ்சம் நின்தனக்கேகரைந்துகும் *
கொடியவல்வினையேன் உன்னையென்றுகொல்கூடுவதே?
3341 கூடிநீரைக்கடைந்தவாறும் அமுதம்தேவருண்ண * அசுரரை
வீடும்வண்ணங்களே செய்துபோனவித்தகமும் *
ஊடுபுக்கெனதாவியை உருக்கியுண்டிடுகின்ற * நின்தன்னை
நாடும்வண்ணஞ்சொல்லாய் நச்சுநாகணையானே!
3342 நாகணைமிசைநம்பிரான்சரணே சரண்நமக்கென்று * நாள்தொறும்
ஏகசிந்தையனாய்க் குருகூர்ச்சடகோபன்மாறன் *
ஆகநூற்றவந்தாதி ஆயிரத்துள்இவையுமோர்பத்தும் வல்லார் *
மாகவைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே. (2)