Your browser does not support the audio element.
audio
3090 முடியானே! மூவுலகும் தொழுதேத்தும்சீ
ரடியானே! * ஆழ்கடலைக்கடைந்தாய்! புள்ளூர்
கொடியானே! * கொண்டல்வண்ணா! அண்டத்துஉம்பரில்
நெடியானே! * என்றுகிடக்கும் என்நெஞ்சமே. (2)
3091 நெஞ்சமேநீள்நகராக இருந்தஎன்
தஞ்சனே! * தண்ணிலங்கைக்கு இறையைச்செற்ற
நஞ்சனே! * ஞாலங்கொள்வான் குறளாகிய
வஞ்சனே! * என்னும்எப்போதும் என்வாசகமே.
3092 வாசகமேயேத்த அருள்செய்யும்வானவர்தம்
நாயகனே! * நாளிளந்திங்களைக் கோள்விடுத்து *
வேயகம்பால்வெண்ணெய்தொடுவுண்ட ஆனாயர்
தாயவனே! * என்று தடவும் என்கைகளே.
3093 கைகளாலாரத் தொழுதுதொழுதுஉன்னை *
வைகலும்மாத்திரைப்போதும் ஓர்வீடின்றி *
பைகொள்பாம்பேறி உறைபரனே! * உன்னை
மெய்கொள்ளக்காண விரும்பும்என்கண்களே.
3094 கண்களால்காண வருங்கொல்? என்றாசையால் *
மண்கொண்டவாமனன் ஏறமகிழ்ந்துசெல் *
பண்கொண்டபுள்ளின் சிறகொலிபாவித்து *
திண்கொள்ளஓர்க்கும் கிடந்துஎன்செவிகளே.
3095 செவிகளாலார நின்கீர்த்திக்கனியென்னும்
கவிகளே * காலப்பண்தேன் உறைப்பத்துற்று *
புவியின்மேல் பொன்னெடுஞ்சக்கரத்துன்னையே *
அவிவின்றியாதரிக்கும் எனதாவியே.
3096 ஆவியே! ஆரமுதே! என்னையாளுடை *
தூவியம்புள்ளுடையாய்! சுடர்நேமியாய்! *
பாவியேன்நெஞ்சம் புலம்பப்பலகாலும் *
கூவியும்காணப்பெறேன் உனகோலமே.
3097 கோலமே! தாமரைக்கண்ணது ஓரஞ்சன
நீலமே! * நின்றெனதாவியை ஈர்கின்ற
சீலமே! * சென்றுசொல்லாதன முன்னிலாம்
காலமே! * உன்னைஎந்நாள் கண்டுகொள்வனே?
3098 கொள்வன்நான்மாவலி! மூவடிதாவென்ற
கள்வனே! * கஞ்சனைவஞ்சித்து வாணனை
உள்வன்மைதீர * ஓராயிரந்தோள்துணித்த
புள்வல்லாய்! * உன்னையெஞ்ஞான்று பொருந்துவனே?
3099 பொருந்தியமாமருதினிடைபோய * எம்
பெருந்தகாய்! * உன்கழல்காணிய பேதுற்று *
வருந்திநான் வாசகமாலைகொண்டு * உன்னையே
இருந்திருந்து எத்தனைகாலம்புலம்புவனே?
3100 புலம்புசீர்ப் பூமியளந்தபெருமானை *
நலங்கொள்சீர் நன்குருகூர்ச்சடகோபன் * சொல்
வலங்கொண்டவாயிரத்துள் இவையுமோர் பத்து *
இலங்குவான் யாவருமேறுவர் சொன்னாலே. (2)