Your browser does not support the audio element.
audio
3079 பயிலுஞ்சுடரொளிமூர்த்தியைப் பங்கயக்கண்ணனை *
பயிலவினிய நம்பாற்கடல்சேர்ந்தபரமனை *
பயிலுந்திருவுடையார் யவரேலுமவர்கண்டீர் *
பயிலும்பிறப்பிடைதோறு எம்மையாளும்பரமரே. (2)
3080 ஆளும்பரமனைக்கண்ணனை ஆழிப்பிரான்தன்னை *
தோளுமோர்நான்குடைத் தூமணிவண்ணனெம்மான் தன்னை *
தாளும்தடக்கையும்கூப்பிப் பணியுமவர்கண்டீர் *
நாளும்பிறப்பிடைதோறு எம்மையாளுடைநாதரே.
3081 நாதனைஞாலமும்வானமுமேத்தும் நறுந்துழாய்ப்
போதனை * பொன்நெடுஞ்சக்கரத்து எந்தைபிரான் தன்னை *
பாதம்பணியவல்லாரைப் பணியுமவர்கண்டீர் *
ஓதும்பிறப்பிடைதோறு எம்மையாளுடையார்களே.
3082 உடையார்ந்தவாடையன் கண்டிகையன் உடை நாணினன் *
புடையார்பொன்னூலினன் பொன்முடியன், மற்றும் பல்கலன் *
நடையாவுடைத்திருநாரணன் தொண்டர்தொண்டர் கண்டீர் *
இடையார்பிறப்பிடைதோறு எமக்கெம்பெருமக்களே.
3083 பெருமக்களுள்ளவர்தம்பெருமானை * அமரர்கட்கு *
அருமையொழிய அன்றாரமுதூட்டியவப்பனை *
பெருமைபிதற்றவல்லாரைப் பிதற்றுமவர்கண்டீர் *
வருமையுமிம்மையும் நம்மையளிக்கும்பிராக்களே.
3084 அளிக்கும்பரமனைக்கண்ணனை ஆழிப்பிரான்தன்னை *
துளிக்கும்நறுங்கண்ணித் தூமணிவண்ணனெம்மான் தன்னை *
ஒளிக்கொண்டசோதியை உள்ளத்துக்கொள்ளுமவர் கண்டீர் *
சலிப்பின்றியாண்டெம்மைச் சன்மசன்மாந்தரம் காப்பரே.
3085 சன்மசன்மாந்தரம்காத்து அடியார்களைக்கொண்டுபோய் *
தன்மைபொறுத்தித் தன்தாளிணைக்கீழ்க்கொள்ளும் அப்பனை *
தொன்மைபிதற்றவல்லாரைப் பிதற்றுமவர்கண்டீர் *
நம்மைபெறுத்தெம்மை நாளுய்யக்கொள்கின்றநம்பரே.
3086 நம்பனைஞாலம்படைத்தவனைத் திருமார்பனை *
உம்பருலகினில்யார்க்கும் உணர்வரியான்தன்னை *
கும்பிநரகர்களேத்துவரேலும் அவர்கண்டீர் *
எம்பல்பிறப்பிடைதோறு எம்தொழுகுலம்தாங்களே.
3087 குலந்தாங்குசாதிகள் நாலிலுங்கீழிழிந்து * எத்தனை
நலந்தானிலாத சண்டாளசண்டாளர்களாகிலும் *
வலந்தாங்குசக்கரத்தண்ணல் மணிவண்ணற்காளென்று உள்
கலந்தார் * அடியார்தம்அடியார் எம்மடிகளே.
3088 அடியார்ந்தவையமுண்டு ஆலிலையன்னவசஞ்செய்யும் *
படியாதுமில்குழவிப் படியெந்தைபிரான்றனக்கு *
அடியாரடியார்தம் அடியாரடியார் தமக்கு *
அடியாரடியார்தம்அடியாரடியோங்களே.
3089 அடியோங்குநூற்றுவர்வீய அன்றுஐவர்க்கருள்செய்த
நெடியோனை * தென்குருகூர்ச்சடகோபன் குற்றேவல்கள் *
அடியார்ந்தவாயிரத்துள் இவைபத்துஅவன்தொண்டர் மேல்
முடிவு * ஆரக்கற்கிற்கில் சன்மஞ்செய்யாமை முடியுமே. (2)