
474 மார்கழித்திங்கள் மதிநிறைந்தநன்னாளால் *
நீராடப்போதுவீர் போதுமினோநேரிழையீர்! *
சீர்மல்குமாய்ப்பாடிச் செல்வச்சிறுமீர்காள்! *
கூர்வேல்கொடுந்தொழிலன் நந்தகோபன்குமரன் *
ஏரார்ந்தகண்ணி யசோதையிளஞ்சிங்கம் *
கார்மேனிச்செங்கண் கதிர்மதியம்போல்முகத்தான் *
நாராயணனே நமக்கேபறைதருவான் *
பாரோர்புகழப் படிந்தேலோரெம்பாவாய். (2)
475 வையத்துவாழ்வீர்காள்! நாமும்நம்பாவைக்கு *
செய்யும்கிரிசைகள் கேளீரோ * பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடிபாடி *
நெய்யுண்ணோம்பாலுண்ணோம் நாட்காலேநீராடி *
மையிட்டெழுதோம் மலரிட்டுநாம்முடியோம் *
செய்யாதனசெய்யோம் தீக்குறளைசென்றோதோம் *
ஐயமும்பிச்சையும் ஆந்தனையும்கைகாட்டி *
உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்.
476 ஓங்கியுலகளந்த உத்தமன்பேர்பாடி *
நாங்கள்நம்பாவைக்குச் சாற்றிநீராடினால் *
தீங்கின்றிநாடெல்லாம் திங்கள்மும்மாரிபெய்து *
ஓங்குபெருஞ்செந்நெலூடு கயலுகளப் *
பூங்குவளைப்போதில் பொறிவண்டுகண்படுப்பத் *
தேங்காதேபுக்கிருந்து சீர்த்தமுலைபற்றி
வாங்க * குடம்நிறைக்கும் வள்ளல்பெரும்பசுக்கள் *
நீங்காதசெல்வம் நிறைந்தேலோரெம்பாவாய். (2)
479 புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலின் *
வெள்ளைவிளிசங்கின் பேரரவம்கேட்டிலையோ? *
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலைநஞ்சுண்டு *
கள்ளச்சகடம் கலக்கழியக்காலோச்சி *
வெள்ளத்தரவில் துயிலமர்ந்தவித்தினை *
உள்ளத்துக்கொண்டு முனிவர்களும்யோகிகளும் *
மெள்ளவெழுந்து அரியென்றபேரரவம் *
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்.
480 கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் * கலந்து
பேசினபேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! *
காசும்பிறப்பும் கலகலப்பக்கைபேர்த்து *
வாசநறுங்குழலாய்ச்சியர் * மத்தினால்
ஓசைபடுத்த தயிரரவம்கேட்டிலையோ? *
நாயகப்பெண்பிள்ளாய்! நாராயணன்மூர்த்தி *
கேசவனைப்பாடவும் நீகேட்டேகிடத்தியோ? *
தேசமுடையாய்! திறவேலோரெம்பாவாய்.
481 கீழ்வானம்வெள்ளென்று எருமைசிறுவீடு *
மேய்வான்பரந்தனகாண் மிக்குள்ளபிள்ளைகளும் *
போவான்போகின்றாரைப் போகாமல்காத்து * உன்னைக்
கூவுவான்வந்துநின்றோம் * கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு *
மாவாய்பிளந்தானை மல்லரைமாட்டிய *
தேவாதிதேவனைச் சென்றுநாம்சேவித்தால் *
ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்.
483 நோற்றுச்சுவர்க்கம் புகுகின்றவம்மனாய்! *
மாற்றமும்தாராரோ? வாசல்திறவாதார் *
நாற்றத்துழாய்முடி நாராயணன்நம்மால் *
போற்றப்பறைதரும் புண்ணியனால் * பண்டொருநாள்
கூற்றத்தின்வாய்வீழ்ந்த கும்பகரணனும் *
தோற்றுமுனக்கே பெருந்துயில்தான்தந்தானோ? *
ஆற்றஅனந்தலுடையாய்! அருங்கலமே! *
தேற்றமாய்வந்து திறவேலோரெம்பாவாய்.
484 கற்றுக்கறவைக் கணங்கள்பலகறந்து *
செற்றார்திறலழியச் சென்றுசெருச்செய்யும் *
குற்றமொன்றில்லாத கோவலர்தம்பொற்கொடியே! *
புற்றரவல்குல் புனமயிலே! போதராய் *
சுற்றத்துத்தோழிமாரெல்லாரும்வந்து * நின்
முற்றம்புகுந்து முகில்வண்ணன்பேர்பாட *
சிற்றாதேபேசாதே செல்வப்பெண்டாட்டி! * நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோரெம்பாவாய்.
485 கனைத்திளங்கற்றெருமை கன்றுக்கிரங்கி *
நினைத்துமுலைவழியே நின்றுபால்சோர *
நனைத்தில்லம்சேறாக்கும் நற்செல்வன்தங்காய்! *
பனித்தலைவீழ நின்வாசற்கடைபற்றிச் *
சினத்தினால்தென்னிலங்கைக் கோமானைச்செற்ற *
மனத்துக்கினியானைப் பாடவும்நீவாய்திறவாய் *
இனித்தானெழுந்திராய் ஈதென்னபேருறக்கம்? *
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய்.
486 புள்ளின்வாய்கீண்டானைப் பொல்லாவரக்கனை *
கிள்ளிக்களைந்தானைக் கீர்த்திமைபாடிப்போய் *
பிள்ளைகளெல்லாரும் பாவைக்களம்புக்கார் *
வெள்ளியெழுந்து வியாழ முறங்கிற்று *
புள்ளும்சிலம்பினகாண் போதரிக்கண்ணினாய்! *
குள்ளக்குளிரக் குடைந்துநீராடாதே *
பள்ளிக்கிடத்தியோ? பாவாய்! நீநன்னாளால் *
கள்ளம்தவிர்ந்து கலந்தேலோரெம்பாவாய்.
487 உங்கள்புழக்கடைத் தோட்டத்துவாவியுள் *
செங்கழுனீர்வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய்கூம்பின காண் *
செங்கற்பொடிக்கூறை வெண்பல்தவத்தவர் *
தங்கள்திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் *
எங்களைமுன்ன மெழுப்புவான்வாய்பேசும் *
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்! *
சங்கொடுசக்கரம் ஏந்தும்தடக்கையன் *
பங்கயக்கண்ணானைப் பாடேலோரெம்பாவாய்.
488 எல்லே! இளங்கிளியே! இன்னமுறங்குதியோ? *
சில்லென்றழையேன்மின்! நங்கைமீர்! போதருகின்றேன் *
வல்லையுன்கட்டுரைகள் பண்டேயுன்வாயறிதும் *
வல்லீர்கள்நீங்களே நானேதானாயிடுக *
ஒல்லைநீபோதாய் உனக்கென்ன வேறுடையை *
எல்லாரும்போந்தாரோ? போந்தார்போந்தெண்ணிக்கொள் *
வல்லானைகொன்றானை மாற்றாரைமாற்றழிக்க
வல்லானை * மாயனைப் பாடேலோரெம்பாவாய்.