TNT 1.1 2052 ## மின் உருவாய் முன் உருவில் வேதம் நான்கு ஆய் * விளக்கு ஒளி ஆய் முளைத்து எழுந்த திங்கள் தான் ஆய் * பின் உரு ஆய் முன் உருவில் பிணி மூப்பு இல்லாப் * பிறப்பிலி ஆய் இறப்பதற்கே எண்ணாது ** எண்ணும் பொன் உரு ஆய் மணி உருவில் பூதம் ஐந்து ஆய்ப் * புனல் உரு ஆய் அனல் உருவில் திகழும் சோதி * தன் உரு ஆய் என் உருவில் நின்ற எந்தை * தளிர் புரையும் திருவடி என் தலைமேலவே 1
TNT 1.2 2053 பார் உருவில் நீர் எரி கால் விசும்பும் ஆகிப் * பல் வேறு சமயமும் ஆய்ப் பரந்து நின்ற * ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற * இமையவர் தம் திருவுரு வேறு எண்ணும்போது ** ஓர் உருவம் பொன் உருவம் ஒன்று செந்தீ * ஒன்று மா கடல் உருவம் ஒத்துநின்ற * மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி * முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே 2
TNT 1.3 2054 திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும் * திரேதைக்கண் வளை உருவாய்த் திகழ்ந்தான் என்றும் * பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் * பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை ** ஒரு வடிவத்து ஓர் உரு என்று உணரல் ஆகாது * ஊழிதோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால் * கரு வடிவில் செங் கண்ண வண்ணன் தன்னைக் * கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே? 3
TNT 1.4 2055 இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை * இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்து ஆய் * செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகித் * திசை நான்கும் ஆய்த் திங்கள் ஞாயிறு ஆகி ** அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை * அந்தணர்மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை * மந்திரத்தால் மறவாது என்றும் * வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே 4
TNT 1.5 2056 ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப * ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து * எண் மதியும் கடந்து அண்டமீது போகி * இரு விசும்பினூடு போய் எழுந்து ** மேலைத் தண் மதியும் கதிரவனும் தவிர ஓடித் * தாரகையின் புறந் தடவி அப்பால் மிக்கு * மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை * மலர் புரையும் திருவடியே வணங்கினேனே 5
TNT 1.6 2057 அலம்புரிந்த நெடுந் தடக்கை அமரர் வேந்தன் * அம் சிறைப் புள் தனிப் பாகன் அவுணர்க்கு என்றும் * சலம்புரிந்து அங்கு அருள் இல்லாத் தன்மையாளன் * தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி ** நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை ஈர்த்த * நெடு வேய்கள் படு முத்தம் உந்த உந்தி * புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப் * பூங் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே 6
TNT 1.7 2058 வற்பு உடைய வரை நெடுந் தோள் மன்னர் மாள * வடி வாய மழு ஏந்தி உலகம் ஆண்டு * வெற்பு உடைய நெடுங் கடலுள் தனி வேல் உய்த்த * வேள் முதலா வென்றான் ஊர் விந்தம் மேய ** கற்பு உடைய மடக் கன்னி காவல் பூண்ட * கடி பொழில் சூழ் நெடு மறுகில் கமல வேலி * பொற்பு உடைய மலை அரையன் பணிய நின்ற * பூங் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே 7
TNT 1.8 2059 ## நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய் * நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி ஊரகத்தாய் * ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய் * உள்ளுவார் உள்ளத்தாய் ** உலகம் ஏத்தும் காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா * காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய் * பேராது என் நெஞ்சின் உள்ளாய் * பெருமான் உன் திருவடியே பேணினேனே 8
TNT 1.9 2060 வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையாய் * மதிள் கச்சியூராய் பேராய் * கொங்கத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன் * குலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான் ** பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனி வரையின் உச்சியாய் பவள வண்ணா! * எங்கு உற்றாய்? எம் பெருமான் உன்னை நாடி * ஏழையேன் இங்ஙனமே உழிதருகேனே 9
TNT 1.10 2061 பொன் ஆனாய் பொழில் ஏழும் காவல் பூண்ட * புகழ் ஆனாய் இகழ்வாய தொண்டனேன் நான் * என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால் * என் அறிவன் ஏழையேன்? ** உலகம் ஏத்தும் தென் ஆனாய் வட ஆனாய் குடபால் ஆனாய் * குணபால மத யானாய்! இமையோர்க்கு என்றும் முன் ஆனாய் * பின் ஆனார் வணங்கும் சோதி! * திருமூழிக்களத்து ஆனாய்! முதல் ஆனாயே! 10