Your browser does not support the audio element.
audio
3233 கையார்சக்கரத்து என்கருமாணிக்கமே! என்றென்று *
பொய்யேகைம்மைசொல்லிப் புறமேபுறமேயாடி *
மெய்யேபெற்றொழிந்தேன்விதிவாய்க்கின்றுகாப்பாரார்? *
ஐயோ! கண்ணபிரான்! அறையோ! இனிப்போனாலே. (2)
3234 போனாய்! மாமருதின்நடுவே என்பொல்லாமணியே! *
தேனே! இன்னமுதே! என்றென்றே சிலகூத்துச் சொல்ல *
தானேலெம்பெருமான் அவனென்னாகியொழிந்தான் *
வானேமாநிலமே மற்றுமுற்றுமென்னுள்ளனவே.
3235 உள்ளனமற்றுளவாப் புறமேசிலமாயஞ்சொல்லி *
வள்ளல்! மணிவண்ணனே! என்றென்றே உன்னையும் வஞ்சிக்கும் *
கள்ளமனம்தவிர்ந்தே உன்னைக்கண்டுகொண்டுய்ந்தொழிந்தேன் *
வெள்ளத்தணைக்கிடந்தாயினியுன்னைவிட்டென்கொள்வனே!
3236 என்கொள்வன்? உன்னைவிட்டென்னும் வாசகங்கள் சொல்லியும் *
வன்கள்வனேன் மனத்தைவலித்துக் கண்ணநீர்கரந்து *
நின்கண்நெருங்கவைத்தே எனதாவியைநீக்ககில்லேன் *
என்கண்மலினமறுத்து என்னைக் கூவியருளாய் கண்ணனே!
3237 கண்ணபிரானை விண்ணோர்கருமாணிக்கத்தையமுதை *
நண்ணியும்நண்ணகில்லேன் நடுவேயோருடம்பிலிட்டு *
திண்ணமழுந்தக்கட்டிப் பலசெய்வினைவன்கயிற்றால் *
புண்ணைமறையவரிந்து என்னைப்போரவைத்தாய்புறமே.
3238 புறமறக்கட்டிக்கொண்டு இருவல்வினையார்குமைக்கும் *
முறைமுறையாக்கைபுகலொழியக் கண்டுகொண்டொழிந்தேன் *
நிறமுடைநால்தடந்தோள் செய்யவாய்செய்ய தாமரைக்கண் *
அறமுயலாழியங்கைக் கருமேனியம்மான்தன்னையே.
3239 அம்மானாழிப்பிரான் அவன்எவ்விடத்தான்? யான்ஆர்? *
எம்மாபாவியர்க்கும் விதிவாய்க்கின்றுவாய்க்கும்கண்டீர் *
கைம்மாதுன்பொழித்தாய்! என்று கைதலைபூசலிட்டே *
மெய்ம்மாலாயொழிந்தேன் எம்பிரானும்என்மேலானே.
3240 மேலாத்தேவர்களும் நிலத்தேவரும்மேவித்தொழும் *
மாலார்வந்தினநாள் அடியேன்மனத்தேமன்னினார் *
சேலேய்கண்ணியரும் பெருஞ்செல்வமும்நல்மக்களும் *
மேலாத்தாய்தந்தையும் அவரேயினியாவாரே.
3241 ஆவாரார்துணை? என்று அலைநீர்க்கடலுளழுந்தும்
நாவாய்போல் * பிறவிக்கடலுள் நின்றுநான்துளங்க *
தேவார்கோலத்தொடும் திருச்சக்கரம்சங்கினொடும் *
ஆவா! என்றருள்செய்து அடியேனொடுமானானே.
3242 ஆனானாளுடையானென்று அஃதேகொண்டுகந்துவந்து *
தானேயின்னருள்செய்து என்னைமுற்றவும்தானானான் *
மீனாயாமையுமாய் நரசிங்கமுமாய்க்குறளாய் *
கானாரேனமுமாய்க் கற்கியாமின்னம்கார்வண்ணனே.
3243 கார்வண்ணன்கண்ணபிரான் கமலத்தடங்கண்ணன் தன்னை *
ஏர்வளவொண்கழனிக் குருகூர்ச்சடகோபன்சொன்ன *
சீர்வண்ணவொண்தமிழ்கள் இவையாயிரத்துள் இப்பத்தும் *
ஆர்வண்ணத்தாலுரைப்பார் அடிக்கீழ்புகுவார் பொலிந்தே. (2)