Your browser does not support the audio element.
audio
3189 சீலமில்லாச்சிறியனேலும் செய்வினையோபெரிதால் *
ஞாலமுண்டாய்! ஞானமூர்த்தி! நாராயணா! என்றென்று *
காலந்தோறும்யானிருந்து கைதலைபூசலிட்டால் *
கோலமேனிகாணவாராய் கூவியும்கொள்ளாயே. (2)
3190 கொள்ளமாளாவின்பவெள்ளம் கோதிலதந்திடும் * என்
வள்ளலேயோ! வையங்கொண்ட வாமனாவோ! என்றென்று *
நள்ளிராவும்நண்பகலும் நானிருந்தோலமிட்டால் *
கள்ளமாயா! உன்னை என்கண்காணவந்தீயாயே.
3191 ஈவிலாததீவினைகள் எத்தனைசெய்தனன்கொல்? *
தாவிவையம்கொண்டவெந்தாய்! தாமோதரா! என்றென்று *
கூவிக்கூவிநெஞ்சுருகிக் கண்பனிசோரநின்றால் *
பாவிநீயென்றொன்றுசொல்லாய் பாவியேன்காணவந்தே.
3192 காணவந்துஎன்கண்முகப்பே தாமரைக்கண்பிறழ *
ஆணிசெம்பொன்மேனியெந்தாய்! நின்றருளா யென்றென்று *
நாணமில்லாச்சிறுதகையேன் நானிங்கலற்றுவதென்? *
பேணிவானோர்காணமாட்டாப் பீடுடையப்பனையே.
3193 அப்பனே! அடலாழியானே! * ஆழ்கடலைக்கடைந்த
துப்பனே! * உன்தோள்கள்நான்கும் கண்டிடக்கூடுங்கொல்? என்று *
எப்பொழுதும்கண்ணநீர்கொண்டு ஆவிதுவர்ந்துதுவர்ந்து *
இப்போழுதேவந்திடாயென்று ஏழையேன்நோக்குவனே.
3194 நோக்கிநோக்கியுன்னைக்காண்பான் யானெனதாவியுள்ளே *
நாக்குநீள்வன்ஞானமில்லை நாள்தோறும்என்னுடைய *
ஆக்கையுள்ளுமாவியுள்ளும் அல்லபுறத்தினுள்ளும் *
நீக்கமின்றியெங்கும்நின்றாய்! நின்னையறிந்தறிந்தே.
3195 அறிந்தறிந்துதேறித்தேறி யானெனதாவியுள்ளே *
நிறைந்தஞானமூர்த்தியாயை நின்மலமாகவைத்து *
பிறந்தும்செத்தும்நின்றிடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் *
நறுந்துழாயின்கண்ணியம்மா! நானுன்னைக்கண்டு கொண்டே.
3196 கண்டுகொண்டென்கைகளார நின்திருப்பாதங்கள்மேல் *
எண்திசையுமுள்ளபூக்கொண்டு ஏத்தியுகந்துகந்து *
தொண்டரோங்கள்பாடியாடச் சூழ்கடல்ஞாலத்துள்ளே *
வண்துழாயின்கண்ணிவேந்தே! வந்திடகில்லாயே.
3197 இடகிலேனொன்றட்டகில்லேன் ஐம்புலன்வெல்லகில்லேன் *
கடவனாகிக்காலந்தோறும் பூப்பறித்தேத்தகில்லேன் *
மடவன்நெஞ்சம்காதல்கூர வல்வினையேன்அயர்ப்பாய் *
தடவுகின்றேன்எங்குக்காண்பன் சக்கரத்தண்ணலையே?
3198 சக்கரத்தண்ணலே! என்று தாழ்ந்துகண்ணீர்ததும்ப *
பக்கம்நோக்கிநின்றலந்தேன் பாவியேன்காண்கின்றிலேன் *
மிக்கஞானமூர்த்தியாய வேதவிளக்கினை * என்
தக்கஞானக்கண்களாலே கண்டுதழுவுவனே.
3199 தழுவிநின்றகாதல்தன்னால் தாமரைக்கண்ணன்தன்னை *
குழுவுமாடத்தென்குருகூர் மாறன்சடகோபன் * சொல்
வழுவிலாதவொண்தமிழ்கள் ஆயிரத்துள்இப்பத்தும் *
தழுவப்பாடியாடவல்லார் வைகுந்தமேறுவரே. (2)