Your browser does not support the audio element.
audio
3816 சார்வேதவநெறிக்குத் தாமோதரன்தாள்கள் *
கார்மேகவண்ணன் கமலநயனத்தன் *
நீர்வானம்மண்ணெரிகாலாய் நின்றநேமியான் *
பேர்வானவர்கள் பிதற்றும் பெருமையனே. (2)
3817 பெருமையனேவானத்திமையோர்க்கும்காண்டற்
கருமையனே * ஆகத்தணையாதார்க்கு * என்றும்
திருமெய்யுறைகின்ற செங்கண்மால் * நாளும்
இருமைவினைகடிந்து இங்கென்னையாள்கின்றானே.
3818 ஆள்கின்றானாழியான் ஆரால்குறைவுடையம்? *
மீள்கின்றதில்லைப் பிறவித்துயர்கடிந்தோம் *
வாள்கெண்டையொண்கண் மடப்பின்னைதன்கேள்வன் *
தாள்கண்டுகொண்டு என்தலைமேற்புனைந்தேனே.
3819 தலைமேற்புனைந்தேன் சரணங்கள் * ஆலின்
இலைமேல்துயின்றான் இமையோர்வணங்க *
மலைமேல்தான் நின்று என்மனத்துளிருந்தானை *
நிலைபேர்க்கலாகாமை நிச்சித்திருந்தேனே.
3820 நிச்சித்திருந்தேன் என்நெஞ்சம்கழியாமை *
கைச்சக்கரத்தண்ணல் கள்வம்பெரிதுடையன் *
மெச்சப்படான்பிறர்க்கு மெய்போலும்பொய்வல்லன் *
நச்சப்படும்நமக்கு நாகத்தணையானே.
3821 நாகத்தணையானை நாள்தோறும்ஞானத்தால் *
ஆகத்தணைப்பார்க்கு அருள்செய்யும்அம்மானை *
மாகத்திளமதியம் சேரும்சடையானை *
பாகத்துவைத்தான்தன் பாதம்பணிந்தேனே.
3822 பணிநெஞ்சே! நாளும் பரமபரம்பரனை *
பிணியொன்றும்சாரா பிறவிகெடுத்தாளும் *
மணிநின்றசோதி மதுசூதன்என்னம்மான் *
அணிநின்றசெம்பொன் அடலாழியானே.
3823 ஆழியான் ஆழியமரர்க்குமப்பாலான் *
ஊழியானூழிபடைத்தான் நிரைமேய்த்தான் *
பாழியந்தோளால் வரையெடுத்தான்பாதங்கள் *
வாழிஎன்நெஞ்சே! மறவாதுவாழ்கண்டாய்.
3824 கண்டேன்கமலமலர்ப்பாதம் காண்டலுமே *
விண்டேயொழிந்த வினையாயினவெல்லாம் *
தொண்டேசெய்து என்றும்தொழுதுவழியொழுக *
பண்டேபரமன்பணித்த பணிவகையே.
3825 வகையால்மனமொன்றி மாதவனை * நாளும்
புகையால்விளக்கால் புதுமலரால்நீரால் *
திசைதோறுஅமரர்கள் சென்றிறைஞ்சநின்ற *
தகையான்சரணம் தமர்கட்கோர்பற்றே.
3826 பற்றென்றுபற்றிப் பரமபரம்பரனை *
மல்திண்தோள்மாலை வழுதிவளநாடன் *
சொல்தொடையந்தாதி ஓராயிரத்துள் இப்பத்தும் *
கற்றார்க்கோர்பற்றாகும் கண்ணன்கழலிணையே. (2)