Your browser does not support the audio element.
audio
3222 ஒன்றுந்தேவுமுலகுமுயிரும்மற்றும் யாதுமில்லா
அன்று * நான்முகன்தன்னொடு தேவருலகோடுஉயிர்படைத்தான் *
குன்றம்போல்மணிமாடநீடு திருக்குருகூரதனுள் *
நின்றவாதிப்பிரான்நிற்க மற்றைத்தெய்வம்நாடுதிரே? (2)
3223 நாடிநீர்வணங்கும்தெய்வமும் உம்மையுமுன் படைத்தான் *
வீடில்சீர்புகழாதிப்பிரான் அவன்மேவியுறைகோயில் *
மாடமாளிகைசூழ்ந்தழகாய திருக்குருகூரதனை *
பாடியாடிப்பரவிச்சென்மின்கள் பல்லுலகீர்! பரந்தே.
3224 பரந்ததெய்வமும்பல்லுலகும்படைத்து அன்றுஉடனேவிழுங்கி *
கரந்துமிழ்ந்துகடந்திடந்தது கண்டும்தெளியகில்லீர் *
சிரங்களாலமரர்வணங்கும் திருக்குருகூரதனுள் *
பரன்திறமன்றிப்பல்லுலகீர்! தெய்வம்மற்றில்லை பேசுமினே.
3225 பேசநின்றசிவனுக்கும்பிரமன்தனக்கும் பிறர்க்கும்
நாயகனவனே * கபாலநன்மோக்கத்துக் கண்டுகொண்மின் *
தேசமாமதிள்சூழ்ந்தழகாய திருக்குருகூரதனுள் *
ஈசன்பாலோரவம்பறைதல் என்னாவதுஇலிங்கியர்க்கே?
3226 இலிங்கத்திட்டபுராணத்தீரும் சமணரும்சாக்கியரும் *
வலிந்துவாதுசெய்வீர்களும் மற்றுநுந்தெய்வமுமாகி நின்றான் *
மலிந்துசெந்நெல்கவரிவீசும் திருக்குருகூரதனுள் *
பொலிந்துநின்றபிரான்கண்டீர் ஒன்றும்பொய்யில்லை போற்றுமினே. (2)
3227 போற்றிமற்றோர்தெய்வம் பேணப்புறத்திட்டு * உம்மையின்னே
தேற்றிவைத்தது எல்லீரும்வீடுபெற்றால்உலகில்லை யென்றே *
சேற்றில்செந்நெல்கமலமோங்கு திருக்குருகூரதனுள் *
ஆற்றவல்லவன்மாயம்கண்டீர் அதுஅறிந்தறிந்தோடுமினே.
3228 ஓடியோடிப்பலபிறப்பும்பிறந்து மற்றோர்தெய்வம் *
பாடியாடிப்பணிந்து பல்படிகால்வழியேறிக்கண்டீர் *
கூடிவானவரேத்தநின்ற திருக்குருகூரதனுள் *
ஆடுபுட்கொடியாதிமூர்த்திக்கு அடிமைபுகுவதுவே.
3229 புக்கடிமையினால்தன்னைக் கண்ட மார்க்கண்டேயனவனை *
நக்கபிரானும்அன்றுய்யக்கொண்டது நாராயணனருளே *
கொக்கலர்தடந்தாழைவேலித் திருக்குருகூரதனுள் *
மிக்கவாதிப்பிரான்நிற்க மற்றைத்தெய்வம்விளம்புதிரே.
3230 விளம்பும்ஆறுசமயமும் அவையாகியும்மற்றும்தன்பால் *
அளந்துகாண்டற்கரியனாகிய ஆதிப்பிரானமரும் *
வளங்கொள்தண்பணைசூழ்ந்தழகாய திருக்குருகூரதனை *
உளங்கொள்ஞானத்துவைம்மின் உம்மையுய்யக்கொண்டுபோகுறிலே.
3231 உறுவதாவதெத்தேவும் எவ்வுலகங்களும்மற்றும்தன்பால் *
மறுவில்மூர்த்தியோடொத்து இத்தனையும்நின்றவண்ணம் நிற்கவே *
செறுவில்செந்நெல்கரும்பொடோங்கு திருக்குருகூரதனுள் *
குறியமாணுருவாகிய நீள்குடக்கூத்தனுக்காட் செய்வதே.
3232 ஆட்செய்ததாழிப்பிரானைச்சேர்ந்தவன் வண்குருகூர் நகரான் *
நாட்கமழ்மகிழ்மாலைமார்பினன் மாறன்சடகோபன் *
வேட்கையால்சொன்னபாடல் ஆயிரத்துள்இப்பத்தும் வல்லார் *
மீட்சியின்றிவைகுந்தமாநகர் மற்றதுகையதுவே. (2)