Your browser does not support the audio element.
audio
3497 கற்பார்இராமபிரானையல்லால் மற்றும்கற்பரோ? *
புற்பாமுதலாப் புல்லெறும்பாதியொன்றின்றியே *
நற்பாலயோத்தியில் வாழும் சராசரம்முற்றவும் *
நற்பாலுக்குய்த்தனன் நான்முகனார்பெற்றநாட்டுளே. (2)
3498 நாட்டிற்பிறந்தவர் நாரணற்காளன்றியாவரோ *
நாட்டிற்பிறந்து படாதனபட்டுமனிசர்க்கா *
நாட்டைநலியுமரக்கரை நாடித்தடிந்திட்டு *
நாட்டையளித்துய்யச்செய்து நடந்தமைகேட்டுமே.
3499 கேட்பார்கள்கேசவன்கீர்த்தியல்லால் மற்றும்கேட்பரோ? *
கேட்பார்செவிசுடு கீழ்மைவசவுகளேவையும் *
சேட்பாற்பழம்பகைவன் சிசுபாலன் * திருவடி
தாட்பாலடைந்த தன்மையறிவாரையறிந்துமே.
3500 தன்மையறிபவர்தாம் அவற்காளன்றியாவரோ? *
பன்மைப்படர்பொருள் ஆதுமில்பாழ்நெடுங்காலத்து *
நன்மைப்புனல்பண்ணி நான்முகனைப்பண்ணி * தன்னுள்ளே
தொன்மைமயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.
3501 சூழல்கள் சிந்திக்கில் மாயன்கழலன்றிச்சூழ்வரோ? *
ஆழப்பெரும்புனல்தன்னுள் அழுந்தியஞாலத்தை *
தாழப்படாமல் தன்பாலொருகோட்டிடைத்தான் கொண்ட *
கேழல்திருவுருவாயிற்றுக் கேட்டுமுணர்ந்துமே.
3502 கேட்டுமுணர்ந்தவர் கேசவற்காளன்றியாவரோ? *
வாட்டமிலாவண்கை மாவலிவாதிக்கவாதிப்புண்டு *
ஈட்டங்கொள்தேவர்கள் சென்றிரந்தார்க்கிடர்நீக்கிய *
கோட்டங்கைவாமனனாய்ச் செய்தகூத்துகள்கண்டுமே.
3503 கண்டும்தெளிந்தும்கற்றார் கண்ணற்காளன்றியாவரோ? *
வண்டுண்மலர்த்தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள் *
இண்டைச்சடைமுடி ஈசனுடன்கொண்டுஉசாச்சொல்ல *
கொண்டங்குத்தன்னொடும்கொண்டு உடன்சென்ற துணர்ந்துமே.
3504 செல்லவுணர்ந்தவர் செல்வன்தன்சீரன்றிக்கற்பரோ? *
எல்லையிலாதபெருந்தவத்தால் பலசெய்மிறை *
அல்லலமரரைச்செய்யும் இரணியனாகத்தை *
மல்லலரியுருவாய்ச் செய்தமாயமறிந்துமே.
3505 மாயமறிபவர் மாயவற்காளன்றியாவரோ? *
தாயஞ்செறுமொருநூற்றுவர்மங்க ஓரைவர்க்காய் *
தேசமறியவோர்சாரதியாய்ச்சென்று சேனையை
நாசஞ்செய்திட்டு * நடந்தநல்வார்த்தையறிந்துமே.
3506 வார்த்தையறிபவர் மாயவற்காளன்றியாவரோ? *
போர்த்தபிறப்பொடுநோயோடுமூப்பொடு இறப்பிவை
பேர்த்து * பெருந்துன்பம்வேரறநீக்கித் தன்தாளின்கீழ்ச்
சேர்த்து * அவன்செய்யும்சேமத்தையெண்ணித் தெளிவுற்றே. (2)
3507 தெளிவுற்றுவீவின்றிநின்றவர்க்கு இன்பக்கதிசெய்யும் *
தெளிவுற்றகண்ணனை தென்குருகூர்ச்சடகோபன்சொல் *
தெளிவுற்றவாயிரத்துள் இவைபத்தும்வல்லாரவர் *
தெளிவுற்றசிந்தையர் பாமருமூவுலகத்துள்ளே. (2)