Your browser does not support the audio element.
audio
3860 திருமாலிருஞ்சோலைமலை என்றேன் என்ன *
திருமால்வந்து என்னெஞ்சுநிறையப்புகுந்தான் *
குருமாமணியுந்துபுனல் பொன்னித்தென்பால் *
திருமால்சென்றுசேர்விடம் தென்திருப்பேரே. (2)
3861 பேரேயுறைகின்றபிரான் இன்றுவந்து *
பேரேனென்று என்னெஞ்சுநிறையப்புகுந்தான் *
காரேழ்கடலேழ் மலையேழுலகுண்டும் *
ஆராவயிற்றானை அடங்கப்பிடித்தேனே.
3862 பிடித்தேன்பிறவிகெடுத்தேன் பிணிசாரேன் *
மடித்தேன்மனைவாழ்க்கையுள் நிற்பதோர்மாயையை *
கொடிக்கோபுரமாடங்கள்சூழ் திருப்பேரான் *
அடிச்சேர்வது எனக்கெளிதாயினவாறே.
3863 எளிதாயினவாறென்று எங்கண்கள்களிப்ப *
களிதாகியசிந்தையனாய்க் களிக்கின்றேன் *
கிளிதாவியசோலைகள்சூழ் திருப்பேரான் *
தெளிதாகியசேண்விசும்புதருவானே.
3864 வானேதருவான் எனக்காஎன்னோடொட்டி *
ஊனேய்குரம்பை யிதனுள்புகுந்து * இன்று
தானேதடுமாற்றவினைகள் தவிர்த்தான் *
தேனேபொழில் தென் திருப்பேர்நகரானே.
3865 திருப்பேர்நகரான் திருமாலிருஞ்சோலை *
பொருப்பேயுறைகின்றபிரான் இன்றுவந்து *
இருப்பேனென்று என்னெஞ்சுநிறையப்புகுந்தான் *
விருப்பேபெற்று அமுதமுண்டுகளித்தேனே. (2)
3866 உண்டுகளித்தேற்கு உம்பரென்குறை? * மேலைத்
தொண்டுகளித்து அந்திதொழும்சொல்லுப்பெற்றேன் *
வண்டுகளிக்கும்பொழில்சூழ் திருப்பேரான் *
கண்டுகளிப்பக் கண்ணுள்நின்றகலானே.
3867 கண்ணுள்நின்றகலான் கருத்தின்கண்பெரியன் *
எண்ணில்நுண்பொருள் ஏழிசையின்சுவைதானே *
வண்ணநன்மணிமாடங்கள்சூழ் திருப்பேரான் *
திண்ணமென்மனத்துப் புகுந்தான்செறிந்தின்றே.
3868 இன்றென்னைப்பொருளாக்கித் தன்னைஎன்னுள் வைத்தான் *
அன்றென்னைப்புறம்போகப்புணர்த்தது என்செய்வான்? *
குன்றென்னத்திகழ்மாடங்கள்சூழ் திருப்பேரான் *
ஒன்றெனக்கருள்செய்ய உணர்த்தலுற்றேனே.
3869 உற்றேன்உகந்துபணிசெய்து உனபாதம்
பெற்றேன் * ஈதேயின்னம்வேண்டுவதுஎந்தாய்! *
கற்றார்மறைவாணர்கள்வாழ் திருப்பேராற்கு *
அற்றாரடியார்தமக்கு அல்லல்நில்லாவே. (2)
3870 நில்லாவல்லல் நீள்வயல்சூழ்திருப்பேர்மேல் *
நல்லார்பலர்வாழ் குருகூர்ச்சடகோபன் *
சொல்லார்தமிழ் ஆயிரத்துள்இவைபத்தும்
வல்லார் * தொண்டராள்வது சூழ்பொன்விசும்பே. (2)