
497 அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி *
சென்றங்குத்தென்லிங்கைசெற்றாய்! திறல்போற்றி *
பொன்றச்சகடமுதைத்தாய்! புகழ்போற்றி *
கன்றுகுணிலாஎறிந்தாய்! கழல்போற்றி *
குன்றுகுடையாவெடுத்தாய்! குணம்போற்றி *
வென்றுபகைகெடுக்கும் நின்கையில்வேல்போற்றி *
என்றென்றுன்சேவகமே ஏத்திப்பறைகொள்வான் *
இன்றுயாம்வந்தோம் இரங்கேலோரெம்பாவாய். (2)
498 ஒருத்திமகனாய்ப்பிறந்து * ஓரிரவில்
ஒருத்திமகனாய் ஒளித்துவளர *
தரிக்கிலானாகித் தான்தீங்குநினைந்த *
கருத்தைப்பிழைப்பித்துக் கஞ்சன்வயிற்றில் *
நெருப்பென்னநின்ற நெடுமாலே! * உன்னை
அருத்தித்துவந்தோம் பறைதருதியாகில் *
திருத்தக்கசெல்வமும் சேவகமும்யாம்பாடி *
வருத்தமும்தீர்ந்து மகிழ்ந்தேலோரெம்பாவாய்.
501 கறவைகள்பின்சென்று கானம்சேர்ந்துண்போம் *
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து * உன்தன்னைப்
பிறவிபெறுந்தனைப் புண்ணியம்யாமுடையோம் *
குறைவொன்றுமில்லாத கோவிந்தா! * உன்தன்னோடு
உறவேல்நமக்கு இங்கொழிக்கவொழியாது *
அறியாதபிள்ளைகளோம் அன்பினால் * உன்தன்னை
சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே *
இறைவா! நீதாராய் பறையேலோரெம்பாவாய். (2)
502 சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச்சேவித்து * உன்
பொற்றாமரையடியே போற்றும்பொருள்கேளாய் *
பெற்றம்மேய்த்துண்ணுங் குலத்தில் பிறந்து * நீ
குற்றேவலெங்களைக் கொள்ளாமற்போகாது *
இற்றைப்பறைகொள்வா னன்றுகாண்கோவிந்தா! *
எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் * உன்தன்னோடு
உற்றோமேயாவோம் உனக்கேநாமாட்செய்வோம் *
மற்றைநம்காமங்கள் மாற்றேலோரெம்பாவாய். (2)
503 வங்கக்கடல்கடைந்த மாதவனைக்கேசவனைத் *
திங்கள்திருமுகத்துச் சேயிழையார்சென்றிறைஞ்சி *
அங்கப்பறைகொண்டவாற்றை * அணிபுதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான்கோதை சொன்ன *
சங்கத்தமிழ்மாலை முப்பதும்தப்பாமே *
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால்வரைத்தோள் *
செங்கண்திருமுகத்துச் செல்வத்திருமாலால் *
எங்கும்திருவருள்பெற்று இன்புறுவரெம்பாவாய். (2)