Your browser does not support the audio element.
audio
1962 குன்றமெடுத்துமழைதடுத்து இளையாரொடும் *
மன்றில்குரவையிணைந்தமால் என்னைமால்செய்தான் *
முன்றில்தனிநின்றபெண்ணைமேல் கிடந் தீர்கின்ற *
அன்றிலின்கூட்டைப் பிரிக்ககிற்பவர்ஆர்கொலோ? (2)
1963 பூங்குருந்தொசித்துஆனைகாய்ந்து அரிமாச்செகுத்து *
ஆங்குவேழத்தின் கொம்புகொண்டு * வன்பேய்முலை
வாங்கியுண்டஅவ்வாயன்நிற்க இவ்வாயன்வாய் *
ஏங்குவேய்ங்குழல் என்னோடாடும்இளமையே.
1964 மல்லொடுகஞ்சனும் துஞ்சவென்றமணிவண்ணன் *
அல்லிமலர்த்தண்துழாய் நினைந்திருந்தேனையே *
எல்லியில்மாருதம் வந்தடும், அதுவன்றியும் *
கொல்லைவல்லேற்றின்மணியும் கோயின்மைசெய்யுமே.
1965 பொருந்து மாமரம் ஏழும்எய்தபுனிதனார் *
திருந்துசேவடி என்மனத்துநினைதொறும் *
கருந்தண்மாகடல் கங்குலார்க்கும், அதுவன்றியும் *
வருந்தவாடைவரும் இதற்கினிஎன்செய்கேன்?
1966 அன்னைமுனிவதும் அன்றிலின்குரல்ஈர்வதும் *
மன்னுமறிகடலார்ப்பதும் வளைசோர்வதும் *
பொன்னங்கலையல்குல் அன்னமென்னடைப்பூங்குழல் *
பின்னைமணாளர் திறத்தமாயினபின்னையே.
1967 ஆழியும்சங்குமுடைய நங்களடிகள்தாம் *
பாழிமையானகனவில் நம்மைப்பகர்வித்தார் *
தோழியும்நானும்ஒழிய வையம்துயின்றது *
கோழியும்கூகின்றதில்லைக் கூரிருளாயிற்றே!
1968 காமன்தனக்குமுரையல்லேன் கடல்வண்ணனார் *
மாமணவாளர் எனக்குத்தானும்மகன்சொல்லில் *
யாமங்கள்தோறுஎரிவீசும் என்னிளங்கொங்கைகள் *
மாமணிவண்ணர் திறத்தவாய்வளர்கின்றவே.
1969 மஞ்சுறுமாலிருஞ்சோலை நின்றமணாளனார் *
நெஞ்சம்நிறைகொண்டுபோயினார் நினைகின்றிலர் *
வெஞ்சுடர்போய்விடியாமல் எவ்விடம்புக்கதோ! *
நஞ்சுஉடலம்துயின்றால் நமக்குஇனிநல்லதே.
1970 காமன்கணைக்குஓரிலக்கமாய் நலத்தில்மிகு *
பூமருகோல நம்பெண்மைசிந்தித்திராதுபோய் *
தூமலர்நீர்கொடு தோழி! நாம்தொழுதேத்தினால் *
கார்முகில்வண்ணரைக் கண்களால்காணலாங்கொலோ?
1971 வென்றிவிடையுடன் ஏழடர்த்தஅடிகளை *
மன்றில்மலிபுகழ் மங்கைமன்கலிகன்றிசொல் *
ஒன்றுநின்றஒன்பதும் உரைப்பவர்தங்கள்மேல் *
என்றும்நில்லாவினை ஒன்றும்சொல்லில்உலகிலே. (2)