Your browser does not support the audio element.
audio
597 கார்க்கோடல் பூக்காள்! கார்க்கடல்வண்ணனென்மேல் * உம்மைப்
போர்க்கோலம்செய்து போரவிடுத்தவனெங்குற்றான் *
ஆர்க்கோஇனிநாம் பூசலிடுவது? * அணிதுழாய்த்
தார்க்கோடும்நெஞ்சந்தன்னைப் படைக்கவல்லேனந்தோ. (2)
598 மேற்றோன்றிப்பூக்காள் மேலுலகங்களின்மீதுபோய் *
மேற்றோன்றும்சோதி வேதமுதல்வர்வலங்கையில் *
மேற்றோன்றுமாழியின் வெஞ்சுடர்போலச் சுடாது * எம்மை
மாற்றோலைப்பட்டவர்கூட்டத்து வைத்துக்கொள்கிற்றிரே.
599 கோவைமணாட்டி! நீயுன்கொழுங்கனிகொண்டு * எம்மை
ஆவிதொலைவியேல் வாயழகர்தம்மையஞ்சுதும் *
பாவியேன்தோன்றிப் பாம்பணையார்க்கும்தம்பாம்புபோல் *
நாவுமிரண்டுள வாய்த்து நாணிலியேனுக்கே.
600 முல்லைப்பிராட்டி! நீயுன்முறுவல்கள் கொண்டு * எம்மை
அல்லல்விளைவியேல் ஆழிநங்காய்! உன்னடைக்கலம் *
கொல்லையரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்
சொல்லும்பொய்யானால் * நானும்பிறந்தமைபொய்யன்றே.
601 பாடும்குயில்காள்! ஈதென்னபாடல்? * நல்வேங்கட
நாடர்நமக்கொருவாழ்வுதந்தால் வந்துபாடுமின் *
ஆடும்கருளக்கொடியுடையார் வந்தருள்செய்து *
கூடுவராயிடில் கூவிநும்பாட்டுகள்கேட்டுமே.
602 கணமாமயில்காள்! கண்ணபிரான்திருக்கோலம்போன்று *
அணிமாநடம்பயின் றாடுகின்றீர்க்கு அடிவீழ்கின்றேன் *
பணமாடரவணைப் பற்பலகாலமும்பள்ளிகொள்
மணவாளர் * நம்மைவைத்த பரிசிதுகாண்மினே.
603 நடமாடித் தோகைவிரிக்கின்ற மாமயில்காள்! * உம்மை
நடமாட்டங்காணப் பாவியேன்நானோர்முதலிலேன் *
குடமாடுகூத்தன் கோவிந்தன்கோமிறைசெய்து * எம்மை
உடைமாடுகொண்டால் உங்களுக்கினியொன்றுபோதுமே.
604 மழையே! மழையே! மண்புறம்பூசி உள்ளாய்நின்று *
மெழுகூற்றினாற்போல் ஊற்றுநல்வேங்கடத் துள்நின்ற *
அழகப்பிரானார் தம்மை என்நெஞ்சத்தகப்படத்
தழுவநின்று * என்னைத் ததைத்துக்கொண்டு ஊற்றவும்வல்லையே. (2)
605 கடலே! கடலே! உன்னைக்கடைந்துகலக்குறுத்து *
உடலுள்புகுந்து நின்றூறலறுத்தவற்கு * என்னையும்
உடலுள் புகுந்துநின்றூறலறுக்கின்றமாயற்கு * என்
நடலைகளெல்லாம் நாகணைக்கேசென்றுரைத்தியே.
606 நல்லஎன்தோழி! நாகணைமிசைநம்பரர் *
செல்வர்பெரியர் சிறுமானிடவர்நாம்செய்வதென்? *
வில்லிபுதுவைவிட்டுசித்தர் தங்கள்தேவரை *
வல்லபரிசுவருவிப்பரேல் அதுகாண்டுமே. (2)