Your browser does not support the audio element.
audio
587 சிந்துரச்செம்பொடிப்போல் திருமாலிருஞ்சோலையெங்கும் *
இந்திரகோபங்களே எழுந்தும்பரந்திட்டனவால் *
மந்தரம்நாட்டியன்று மதுரக்கொழுஞ்சாறுகொண்ட
சுந்தரத்தோளுடையான் சுழலையில்நின்றுய்துங்கொலோ? (2)
588 போர்களிறுபொரும் மாலிருஞ்சோலையம்பூம்புறவில் *
தார்க்கொடிமுல்லைகளும் தவளநகைகாட்டுகின்ற *
கார்க்கொள்பிடாக்கள்நின்று கழறிச்சிரிக்கத்தரியேன் *
ஆர்க்கிடுகோ? தோழி! அவன்தார்ச்செய்தபூசலையே.
589 கருவிளையொண்மலர்காள்! காயாமலர்காள்! * திருமால்
உருவொளிகாட்டுகின்றீர் எனக்குய்வழக்கொன்றுரையீர் *
திருவிளையாடுதிண்தோள் திருமாலிருஞ்சோலைநம்பி *
வரிவளையில்புகுந்து வந்திபற்றும்வழக்குளதே.
590 பைம்பொழில்வாழ்குயில்காள்! மயில்காள்! ஒண்கருவிளைகாள் *
வம்பக்களங்கனிகாள்! வண்ணப்பூவை நறுமலர்காள்! *
ஐம்பெரும்பாதகர்காள்! அணிமாலிருஞ்சோலைநின்ற *
எம்பெருமானுடையநிறம் உங்களுக்கெஞ்செய்வதே?
591 துங்கமலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ்சோலைநின்ற *
செங்கட்கருமுகிலின் திருவுருப்போல் * மலர்மேல்
தொங்கியவண்டினங்காள்! தொகுபூஞ்சுனைகாள்! * சுனையில்
தங்குசெந்தாமரைகாள்! எனக்கோர்சரண்சாற்றுமினே.
592 நாறுநறும்பொழில் மாலிருஞ்சோலைநம்பிக்கு * நான்
நூறுதடாவில்வெண்ணெய் வாய்நேர்ந்துபராவிவைத்தேன் *
நூறுதடாநிறைந்த அக்காரவடிசில்சொன்னேன் *
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவைகொள்ளுங்கொலோ. (2)
593 இன்றுவந்தித்தனையும் அமுதுசெய்திடப்பெறில் * நான்
ஒன்றுநூறாயிரமாக்கொடுத்துப் பின்னும்ஆளும்செய்வன் *
தென்றல்மணங்கமழும் திருமாலிருஞ்சோலைதன்னுள்
நின்றபிரான் * அடியேன்மனத்தே வந்துநேர்படிலே.
594 காலையெழுந்திருந்து கரியகுருவிக்கணங்கள் *
மாலின்வரவுசொல்லி மருள்பாடுதல்மெய்ம்மைகொலோ? *
சோலைமலைப்பெருமான் துவராபதியெம்பெருமான் *
ஆலினிலைப்பெருமான் அவன்வார்த்தையுரைக்கின்றதே.
595 கோங்கலரும்பொழில் மாலிருஞ்சோலயில் கொன்றைகள்மேல் *
தூங்குபொன்மாலைகளோடு உடனாய்நின்றுதூங்குகின்றேன் *
பூங்கொள்திருமுகத்து மடுத்தூதியசங்கொலியும் *
சார்ங்கவில்நாணொலியும் தலைப்பெய்வதெஞ்ஞான்று கொலோ?
596 சந்தொடுகாரகிலும்சுமந்து தடங்கள்பொருது *
வந்திழியும்சிலம்பாறுடை மாலிருஞ்சோலைநின்ற
சுந்தரனை * சுரும்பார்குழல்கோதை தொகுத்துரைத்த *
செந்தமிழ்பத்தும்வல்லார் திருமாலடிசேர்வர்களே. (2)