Your browser does not support the audio element.
audio
1288 தூம்புடைப்பனைக்கைவேழம் துயர்கெடுத்தருளி * மன்னு
காம்புடைக்குன்றமேந்திக் கடுமழைகாத்தஎந்தை *
பூம்புனற்பொன்னி முற்றும்புகுந்து பொன்வரண்ட * எங்கும்
தேம்பொழில்கமழும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே. (2)
1289 கவ்வைவாளெயிற்றுவன்பேய்க் கதிர்முலைசுவைத்து * இலங்கை
வவ்வியஇடும்பைகூரக் கடுங்கணைதுரந்தஎந்தை *
கொவ்வைவாய்மகளிர்கொங்கைக் குங்குமம்கழுவிப் போந்த *
தெய்வநீர்கமழும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
1290 மாத்தொழில்மடங்கக்செற்று மருதிறநடந்து * வன்தாள்
சேத்தொழில்சிதைத்துப் பின்னைசெவ்வித்தோள் புணர்ந்தஎந்தை *
நாத்தொழில்மறைவல்லார்கள் நயந்துஅறம்பயந்த * வண்கைத்
தீத்தொழில்பயிலும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
1291 தாங்கருஞ்சினத்துவன்தாள் தடக்கைமாமருப்புவாங்கி *
பூங்குருந்தொசித்துப்புள்வாய்பிளந்த எருதடர்த்தஎந்தை *
மாங்கனிநுகர்ந்தமந்தி வந்துவண்டிரிய * வாழைத்
தீங்கனிநுகரும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
1292 கருமகளிலங்கையாட்டி பிலங்கொள்வாய்திறந்து * தன்மேல்
வருமவள்செவியும்மூக்கும் வாளினால்தடிந்தஎந்தை *
பெருமகள்பேதைமங்கை தன்னொடும்பிரிவிலாத *
திருமகள்மருவும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
1293 கெண்டையும்குறளும்புள்ளும் கேழலும்அரியும்மாவும் *
அண்டமும்சுடரும்அல்லாவாற்றலும்ஆயஎந்தை *
ஓண்டிறல்தென்னனோடவடவரசோட்டம்கண்ட *
திண்டிறலாளர்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
1294 குன்றமும்வானும்மண்ணும் குளிர்புனல்திங்களோடு *
நின்றவெஞ்சுடரும் அல்லாநிலைகளும்ஆயஎந்தை *
மன்றமும்வயலும்காவும் மாடமும்மணங்கொண்டு * எங்கும்
தென்றல்வந்துலவும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
1295 சங்கையும்துணிவும்பொய்யும்மெய்யும் இத்தரணி யோம்பும் *
பொங்கியமுகிலும் அல்லாப்பொருள்களும்ஆயஎந்தை *
பங்கயமுகுத்ததேறல்பருகியவாளைபாய *
செங்கயலுகளும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
1296 பாவமும்அறமும்வீடும் இன்பமும்துன்பந்தானும் *
கோவமும்அருளும் அல்லாக்குணங்களும்ஆயஎந்தை *
மூவரில்எங்கள்மூர்த்தி இவனெனமுனிவரோடு *
தேவர்வந்திறைஞ்சும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.
1297 திங்கள்தோய்மாடநாங்கூர்த் திருமணிக்கூடத்தானை *
மங்கையர்தலைவன் வண்தார்க்கலியன்வாயொலிகள் வல்லார் *
பொங்குநீருலகமாண்டு பொன்னுலகாண்டு * பின்னும்
வெங்கதிர்ப்பரிதிவட்டத்தூடுபோய் விளங்குவாரே. (2)