Your browser does not support the audio element.
audio
297 நல்லதோர்தாமரைப்பொய்கை நாண்மலர்மேல்பனிசோர *
அல்லியும்தாதும்உதிர்ந்திட்டு அழகழிந்தாலொத்ததாலோ *
இல்லம்வெறியோடிற்றாலோ என்மகளைஎங்கும்காணேன் *
மல்லரையட்டவன்பின்போய் மதுரைப்புறம்புக்காள்கொலோ? (2)
298 ஒன்றுமறிவொன்றில்லாத உருவறைக்கோபாலர்தங்கள் *
கன்றுகால்மாறுமாபோலே கன்னியிருந்தாளைக்கொண்டு *
நன்றும்கிறிசெய்துபோனான் நாராயணன்செய்ததீமை *
என்றும்எமர்கள்குடிக்கு ஓரேச்சுக்கொலாயிடுங்கொலோ?
299 குமரிமணம்செய்துகொண்டு கோலம்செய்துஇல்லத்திருத்தி *
தமரும்பிறரும்அறியத் தாமோதரற்கென்றுசாற்றி *
அமரர்பதியுடைத்தேவி அரசாணியை வழிபட்டு *
துமிலமெழப்பறைகொட்டித் தோரணம்நாட்டிடுங்கொலோ?
300 ஒருமகள்தன்னையுடையேன் உலகம்நிறைந்தபுகழால் *
திருமகள்போலவளர்த்தேன் செங்கண்மால்தான்கொண்டுபோனான் *
பெருமகளாய்க்குடிவாழ்ந்து பெரும்பிள்ளைபெற்றஅசோதை *
மருமகளைக்கண்டுகந்து மணாட்டுப்புறம்செய்யுங்கொலோ?
301 தம்மாமன்நந்தகோபாலன் தழீஇக்கொண்டுஎன்மகள்தன்னை *
செம்மாந்திரேயென்றுசொல்லிச் செழுங்கயற்கண்ணும்செவ்வாயும் *
கொம்மைமுலையும்இடையும் கொழும்பணைத்தோள்களும்கண்டிட்டு *
இம்மகளைப்பெற்றதாயர் இனித்தரியாரென்னுங்கொலோ?
302 வேடர்மறக்குலம்போலே வேண்டிற்றுச்செய்துஎன்மகளை *
கூடியகூட்டமேயாகக் கொண்டுகுடிவாழுங்கொலோ? *
நாடுநகரும்அறிய நல்லதோர்கண்ணாலம்செய்து *
சாடிறப்பாய்ந்தபெருமான் தக்கவாகைப்பற்றுங்கொலோ?
303 அண்டத்தமரர்பெருமான் ஆழியான்இன்றுஎன்மகளை *
பண்டப்பழிப்புக்கள்சொல்லிப் பரிசறஆண்டிடுங்கொலோ? *
கொண்டுகுடிவாழ்க்கைவாழ்ந்து கோவலப்பட்டம்கவித்து *
பண்டைமணாட்டிமார்முன்னே பாதுகாவல்வைக்குங்கொலோ?
304 குடியில்பிறந்தவர்செய்யும் குணமொன்றும்செய்திலன்அந்தோ! *
நடையொன்றும்செய்திலன்நங்காய். நந்தகோபன்மகன்கண்ணன் *
இடையிருபாலும்வணங்க இளைத்திளைத்துஎன்மகள்ஏங்கி *
கடைகயிறேபற்றிவாங்கிக் கைதழும்பேறிடுங்கொலோ?
305 வெண்ணிறத்தோய்தயிர்தன்னை வெள்வரைப்பின்முன்எழுந்து *
கண்ணுறங்காதேயிருந்து கடையவும்தான்வல்லள்கொலோ? *
ஒண்ணிறத்தாமரைச்செங்கண் உலகளந்தான்என்மகளை *
பண்ணறையாப்பணிகொண்டு பரிசறஆண்டிடுங்கொலோ?
306 மாயவன்பின்வழிசென்று வழியிடைமாற்றங்கள்கேட்டு *
ஆயர்கள்சேரியிலும்புக்கு அங்குத்தைமாற்றமுமெல்லாம் *
தாயவள்சொல்லியசொல்லைத் தண்புதுவைப்பட்டன்சொன்ன *
தூயதமிழ்ப்பத்தும்வல்லார் தூமணிவண்ணனுக்காளரே. (2)