Your browser does not support the audio element.
audio
1768 தன்னைநைவிக்கிலேன் வல்வினையேன்தொழுதும்எழு *
பொன்னைநைவிக்கும் அப்பூஞ்செருந்திமணநீழல்வாய் *
என்னைநைவித்து எழில்கொண்டகன்றபெருமானிடம் *
புன்னைமுத்தம்பொழில்சூழ்ந்து அழகாயபுல்லாணியே. (2)
1769 உருகிநெஞ்சே! நினைந்துஇங்குஇருந்தென்? தொழுதும்எழு *
முருகுவண்டுண்மலர்க்கைதையின் நீழலில்முன்னொருநாள் *
பெருகுகாதன்மை என்னுள்ளமெய்தப்பிரிந்தானிடம் *
பொருதுமுந்நீர்க்கரைக்கே மணியுந்துபுல்லாணியே.
1770 ஏதுசெய்தால்மறக்கேன்? மனமே! தொழுதும்எழு *
தாதுமல்குதடம்சூழ்பொழில் தாழ்வர்தொடர்ந்து * பின்
பேதை நினைப்பிரியேன் இனிஎன்று அகன்றானிடம் *
போதுநாளும்கமழும் பொழில்சூழ்ந்தபுல்லாணியே.
1771 கொங்குண்வண்டேகரியாகவந்தான் கொடியேற்கு * முன்
நங்களீசன் நமக்கேபணித்தமொழிசெய்திலன் *
மங்கைநல்லாய்! தொழுதும்எழு போய்அவன்மன்னுமூர் *
பொங்குமுந்நீர்க்கரைக்கே மணியுந்துபுல்லாணியே.
1772 உணரில்உள்ளம்சுடுமால் வினையேன்தொழுதும்எழு *
துணரிஞாழல்நறும்போது நம்சூழ்குழல்பெய்து * பின்
தணரில்ஆவிதளருமென அன்புதந்தானிடம் *
புணரியோதம்பணிலம் மணியுந்துபுல்லாணியே.
1773 எள்கிநெஞ்சே! நினைந்திங்கிருந்தென்? தொழுதும்எழு *
வள்ளல்மாயன்மணிவண்ணன்எம்மான் மருவுமிடம் *
கள்ளவிழும்மலர்க்காவியும் தூமடற்கைதையும் *
புள்ளும்அள்ளல்பழனங்களும்சூழ்ந்த புல்லாணியே.
1774 பரவிநெஞ்சே! தொழுதும்எழு போய்அவன்பாலமாய் *
இரவும்நாளும் இனிக்கண்துயிலாதிருந்துஎன்பயன்? *
விரவிமுத்தம் நெடுவெண்மணல்மேற்கொண்டு * வெண்திரை
புரவியென்னப்புதம்செய்து வந்துந்துபுல்லாணியே.
1775 அலமும்ஆழிப்படையும்உடையார் நமக்குஅன்பராய் *
சலமதாகித்தகவொன்றிலர் நாம்தொழுதும்எழு *
உலவுகால்நற்கழியோங்கு தண்பைம்பொழிலூடு * இசை
புலவுகானல் களிவண்டினம்பாடுபுல்லாணியே.
1776 ஓதிநாமம்குளித்துஉச்சிதன்னால் ஒளிமாமலர் *
பாதம்நாளும்பணிவோம் நமக்கேநலமாதலின் *
ஆதுதாரானெனிலும்தரும் அன்றியுமன்பராய் *
போதும்மாதே! தொழுதும் அவன்மன்னுபுல்லாணியே.
1777 இலங்குமுத்தும்பவளக்கொழுந்தும் எழில்தாமரை *
புலங்கள்முற்றும்பொழில்சூழ்ந்து அழகாயபுல்லாணிமேல் *
கலங்கலில்லாப்புகழான் கலியனொலிமாலை *
வலங்கொள்தொண்டர்க்குஇடமாவது பாடில் வைகுந்தமே. (2)