Chapter 10

Lord Rama of Thillai Chitrakudam - (அங்கண் நெடு)

தில்லைச் சித்திரகூடம். இராம சரிதம்
Lord Rama of Thillai Chitrakudam - (அங்கண் நெடு)
Sage Valmiki elaborately narrated and experienced the story of Rama in the Ramayana. This āzhvār condenses and recounts the Ramayana, experiencing and relishing its essence in his verses.
வால்மீகி முனிவர் இராமயணத்தில் இராம சரித்திரத்தைப் பரக்கக் கூறி அனுபவித்தார். இவ்வாழ்வார் இராமாயணத்தை ஈண்டுச் சுருக்கிக் கூறி அனுபவிக்கிறார்.
Verses: 741 to 751
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will approach the feet of Nāranan who shines with goodness
  • PMT 10.1
    741 ## அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி என்னும் *
    அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி *
    வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி *
    விண் முழுதும் உயக் கொண்ட வீரன் தன்னை **
    செங்கண் நெடுங்கரு முகிலை இராமன் தன்னைத் *
    தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
    எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை *
    என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே (1)
  • PMT 10.2
    742 வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி *
    வரு குருதி பொழி தர வன்கணை ஒன்று ஏவி *
    மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து *
    வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின் **
    செந்தளிர்வாய் மலர் நகை சேர் செழுந்தண் சோலைத் *
    தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
    அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த *
    அணிமணி ஆசனத்து இருந்த அம்மான் தானே (2)
  • PMT 10.3
    743 செவ்வரி நற்கரு நெடுங்கண் சீதைக்கு ஆகிச் *
    சினவிடையோன் சிலை இறுத்து மழுவாள் ஏந்தி *
    வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றி கொண்டு *
    வேல்வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை **
    தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை உயர்ந்த பாங்கர்த் *
    தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
    எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை *
    இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே. (3)
  • PMT 10.4
    744 தொத்து அலர் பூஞ் சுரிகுழல் கைகேசி சொல்லால் *
    தொல் நகரம் துறந்து துறைக் கங்கை தன்னை *
    பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்குப் *
    பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து **
    சித்திரகூடத்து இருந்தான் தன்னை *
    இன்று தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
    எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற *
    இருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே (4)
  • PMT 10.5
    745 வலி வணக்கு வரை நெடுந்தோள் விராதைக் கொன்று *
    வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி *
    கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி *
    கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி **
    சிலை வணக்கி மான் மறிய எய்தான் தன்னைத் *
    தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
    தலை வணக்கிக் கைகூப்பி ஏத்த வல்லார் *
    திரிதலால் தவமுடைத்துத் தரணி தானே (5)
  • PMT 10.6
    746 தனம் மருவு வைதேகி பிரியல் உற்று *
    தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி *
    வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு *
    வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர் கோமான் **
    சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானைத் *
    தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
    இனிது அமர்ந்த அம்மானை இராமன் தன்னை *
    ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே. (6)
  • PMT 10.7
    747 குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து *
    குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி *
    எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன் *
    இன்னுயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து **
    திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னைத் *
    தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
    அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் *
    அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே (7)
  • PMT 10.8
    748 அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி *
    அரசு எய்தி அகத்தியன் வாய்த் தான் முன் கொன்றான் *
    தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி *
    உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் **
    செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான் *
    தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
    எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் *
    இன்னமுதம் மதியோமின்றே (8)
  • PMT 10.9
    749 செறி தவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று *
    செழு மறையோன் உயிர் மீட்டுத் தவத்தோன் ஈந்த *
    நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத் *
    தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட **
    திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் தன்னைத் *
    தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
    உறைவானை மறவாத உள்ளம் தன்னை உடையோம் *
    மற்று உறு துயரம் அடையோம் இன்றே (9)
  • PMT 10.10
    750 ## அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி *
    அடல் அரவப் பகையேறி அசுரர் தம்மை
    வென்று * இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற *
    விண் முழுதும் எதிர் வரத் தன் தாமம் மேவி **
    சென்று இனிது வீற்றிருந்த அம்மான் தன்னைத் *
    தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
    என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி *
    நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே (10)
  • PMT 10.11
    751 ## தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
    திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை *
    எல்லை இல் சீர்த் தயரதன் தன் மகனாய்த் தோன்றிற்று அது முதலாத் *
    தன் உலகம் புக்கது ஈறா **
    கொல் இயலும் படைத்தானைக் கொற்ற ஒள்வாள் *
    கோழியர் கோன் குடைக் குலசேகரன் சொற்செய்த *
    நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் *
    நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே (11)